ராகுலுக்கு வாழ்த்து கூற வரிசை கட்டிய தலைவர்கள்

தினமலர்  தினமலர்
ராகுலுக்கு வாழ்த்து கூற வரிசை கட்டிய தலைவர்கள்

புதுடில்லி : காங்., தலைவராக பொறுப்பேற்றுள்ள, ராகுலுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக, ஏராளமான, காங்., நிர்வாகிகள், கட்சியின் தலைமை அலுவலகத்திலும், அவரது வீட்டிலும் வரிசை கட்டி நிற்கின்றனர்.

காங்., தலைவராக, ராகுல், நேற்று முன்தினம் பதவியேற்றார். இதையடுத்து, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, காங்., மூத்த தலைவர்கள், அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக, டில்லிக்கு படையெடுத்து வருகின்றனர். தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, உ.பி., பீஹார், ஹிமாச்சல் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்கள், டில்லியில் குவிந்துள்ளனர்.

டில்லியில் உள்ள ஓட்டல் மற்றும் விடுதிகளில் தங்கியுள்ள இவர்கள், டில்லியில் உள்ள, காங்., தலைமையகத்தில் பெரும் கூட்டமாக திரண்டு நிற்கின்றனர். பூங்கொத்துகளுடன் வரிசையாக நின்று, ராகுலை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கின்றனர்.

ராகுல், தலைமை அலுவலகத்தில் இல்லாத நேரங்களில், அவரது வீட்டுக்கு படையெடுத்துச் செல்கின்றனர். ஆனால், அங்குள்ள பாதுகாவலர்கள், அவர்களை, தலைமை அலுவலகத்துக்கு செல்லும்படி விரட்டி அடிக்கின்றனர்.

மூலக்கதை