அஜீத், நயன்தாரா கொள்கையை விடாமல் கடைபிடிக்கும் ஜெய்

தினமலர்  தினமலர்
அஜீத், நயன்தாரா கொள்கையை விடாமல் கடைபிடிக்கும் ஜெய்

தமிழ் சினிமாவில் அஜீத், நயன்தாரா ஆகிய இருவரும் தாங்கள் நடித்த படங்களின் பிரமோஷன்களில் கலந்து கொள்வதில்லை என்ற கொள் கையை தொடர்ந்து கடைபிடித்து வருகிறார்கள். இதில் அறம் படத்தை தானே தயாரித்து நடித்ததால் அந்த படத்தின் பிரமோஷன்களில் மட்டுமே கலந்து கொண்ட நயன்தாரா, அதையடுத்து சிவகார்த்திகேயனுடன் நடித்துள்ள வேலைக்காரன் படத்தின் இசை வெளியீட்டில் கலந்து கொள்ளவில்லை.

இந்த நிலையில், சமீபகாலமாக ஜெய்யும் அஜீத், நயன்தாரா பாணியில் தான் நடிக்கும் படங்களின் பிரமோஷன்களில் கலந்து கொள்ள மறுத்து வருகிறார். வெங்கட்பிரபு இயக்கிய சென்னை- 28படத்தின் இரண்டாம் பாகத்தின் பிரமோஷனில் அவர் கலந்து கொள்ளாதபோது அந்த படத்தின் ஆடியோ விழா மேடையில் சிலர் அவரை விமர்சித்தனர். குறிப்பாக, அஜீத் கலந்து கொள்வதில்லை என்றால் அவர் வளர்ந்து விட்டார். ஆனால் இன்னும் பெரிதாக வளராத ஜெய் இப்படி செய்வது அவரது வளர்ச்சியை பாதிக்கும் என்று மேடையில் பேசினார்கள்.

இருப்பினும் ஜெய் மாறவில்லை. அவர் இரண்டு வேடங்களில் நடித்துள்ள பலூன் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படத்தில் நடித்துள்ள நாயகிகள் அஞ்சலி, ஜனனி அய்யர் இருவரும் கலந்து கொண்ட நிலையில், ஜெய் மட்டும் ஆப்சென்டாகி விட்டார். இருப்பினும் அதை படக்குழுவினர் பெரிதுபடுத்தவில்லை. மேலும், ஹாரர் கதையில் உருவாகியுள்ள பலூன் படம் டிசம்பர் 29-ந்தேதி திரைக்கு வருகிறது. தற்போது அஞ்சலியின் தெலுங்கு மார்க்கெட் உச்சத்தில் இருப்பதால் தெலுங்கில் இந்த படத்தை 350தியேட்டர்களில் வெளியிடயிருப்பதாக தெரிவிக்கிறார்கள்.

மூலக்கதை