தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்க முடியாது : கர்நாடகா
பெங்களூரு: தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை வழங்கும்படி எழுதிய கடிதத்துக்கு, 'தற்போதைய சூழ்நிலையில், தமிழகத்துக்கு உடனடியாக தண்ணீர் வழங்க முடியாது' என, கர்நாடக அரசு, பதில் அனுப்பியுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டு களாக, கர்நாடகாவில் சரியாக மழை பெய்யாததால், தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி தண்ணீரை, சரியாக வழங்க வில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது.
இந்நிலையில், எதிர்பார்த்ததை விட இந்தாண்டு அதிக மழை பெய்ததால், கர்நாடகாவிலுள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பின.இதையடுத்து, காவிரி தீர்ப்பாய தீர்ப்பின்படி, தற்போது வரை தமிழகத்துக்கு வழங்க வேண்டிய, 192 டி.எம்.சி., தண்ணீரை வழங்கும்படி, கர்நாடக தலைமை செயலருக்கு, தமிழக தலைமை செயலர், சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தார்.
இந்த கடிதத்துக்கு பதிலளித்துள்ள கர்நாடக அரசு, எழுதியுள்ள கடிதம்:இதுவரை, 95 டி.எம்.சி., தண்ணீர் தமிழகத்துக்கு வழங்கியுள்ளோம். மழை பெய்தால், மீண்டும் தண்ணீர் வழங்குவோம். ஆனால், உடனடியாக தண்ணீர் வழங்க முடியாது.தற்போதுள்ள தண்ணீர், வரும் கோடைக்காலத்துக்கு குடிப்பதற்காக தேவைப்படும்.தமிழகத்திலும், இம்முறை கணிசமான அளவு மழை பெய்துள்ளது.
கர்நாடகாவும் தண்ணீர் வழங்கியுள்ளதால், தற்போதைய சூழ்நிலையை சமாளிக்க முடியும். சூழ்நிலைக்கு ஏற்ப தான் தண்ணீர் விட முடியுமே தவிர, குறிப்பிட்ட அளவு தண்ணீர் தான் வழங்க வேண்டும் என்பது முடியாத காரியம். இவ்வாறு கடிதம் எழுதப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.