பெரிய பாண்டியனுக்கு அஞ்சலி செலுத்திய கார்த்தி

தினமலர்  தினமலர்
பெரிய பாண்டியனுக்கு அஞ்சலி செலுத்திய கார்த்தி

ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன், உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நடிகர் கார்த்தி அஞ்சலி செலுத்தினார்.

சமீபத்தில் வினோத் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்ற படம் தீரன் அதிகாரம் ஒன்று. ராஜஸ்தானில் உள்ள கொள்ளையர்களை, கார்த்தி சென்று வேட்டையாடுவது போன்று கதை அமைக்கப்பட்டிருந்தது. இப்படம் தமிழகத்தில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. இப்படத்தை போலீசாரே பாராட்டினார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ராஜஸ்தானில் உள்ள கொள்ளையர்களை பிடிக்க தமிழகத்தை சேர்ந்த மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் சென்றிருந்தார். ஆனால் அவர் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. பெரிய பாண்டியனின் உடல் அரசு மரியாதையுடன் நேற்று இரவு, அவரது சொந்த ஊரான நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில், மூவிருந்தாளி, சாலைப்புதுாரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தன்னுடைய தீரன் படம் போன்றே ஓர் உண்மை சம்பவம் என்பதால், ரியல் தீரனான பெரிய பாண்டியனின் குடும்பத்தாருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார் நடிகர் கார்த்தி. அதோடு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

மூலக்கதை