தேர்தல் நடத்தை விதி மீறல்: ராகுல் மீது வழக்கு பதிவு செய்யவில்லை: தேர்தல் ஆணையம் விளக்கம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
தேர்தல் நடத்தை விதி மீறல்: ராகுல் மீது வழக்கு பதிவு செய்யவில்லை: தேர்தல் ஆணையம் விளக்கம்

புதுடெல்லி: ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை, நோட்டீஸ் மட்டும்தான் விடுக்கப்பட்டு உள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. குஜராத் சட்டசபை தேர்தல் முடிவுக்கு வராத நிலையில் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் காந்தி சில டிவிகளுக்கு பேட்டி அளித்தார்.

பேட்டியின் போது  குஜராத் தேர்தல் பற்றி கருத்துகள் தெரிவித்தார். குஜராத்தில் வாக்குப்பதிவு முடிவதற்கு முந்தைய 48 மணி நேரத்துக்குள், தேர்தல் தொடர்பான பேட்டியை ஒளிபரப்புவது, மக்கள் பிரதிநிதித்துவ சட்ட விதிகளை மீறிய செயல் ஆகும்.

இதுபற்றி தேர்தல் கமி‌ஷனுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, அந்த பேட்டிகளை ஒளிபரப்புவதை உடனே நிறுத்துமாறு தேர்தல் கமி‌ஷன் உத்தரவிட்டது.

மேலும், இந்த விதிமீறலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யுமாறு குஜராத் தலைமை தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டது.

ராகுல் காந்தியின் பேட்டியை ஒளிபரப்பு செய்த மீடியாக்களுக்கு எதிராகவும் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது. அத்துடன், பேட்டி அளித்த ராகுல் காந்தியிடம் விளக்கம் கேட்டு, அவருக்கு தேர்தல் கமி‌ஷன் நோட்டீஸ் அனுப்பியது.

18ந் தேதி மாலை 5 மணிக்குள் விளக்கம் அளிக்குமாறு கூறியுள்ளது. இதற்கிடையே அகமதாபாத்தில் பிரதமர் மோடி வாக்களிக்கையில் சாலையில் பேரணியாக சென்றதை காங்கிரஸ் கடுமையாக விமர்சனம் செய்து உள்ளது.



தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்படவில்லை என காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டினர். தேர்தல் ஆணையத்தை கண்டித்து நேற்று காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் ராகுல் காந்திக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்படவில்லை எனவும் 5 நாட்களில் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் மட்டும்தான் அனுப்பப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

.

மூலக்கதை