இமாச்சல்லில் மழையுடன் பனிப்பொழிவு : வாட்டி வதைக்கும் குளிரால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது
தர்மசாலா: வடஇந்திய மாநிலங்களில் பனியுடன் குளிர் வாட்டி வதைப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேச மாநிலம் தர்மசாலாவில் குளிர்காற்றுடன் கடும் பனிப்பொழிவு வீசுவதால் பலரும் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். குளிரை சமாளிக்க தீயை மூட்டி அதனருகே அமர்ந்து பொழுதை கழிக்கின்றனர். சாலையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டபடி செல்கின்றன. காலையில் பள்ளி செல்லும் மாணவ, மாணவியர் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். கடந்த 2 நாட்களாக தர்மசாலாவில் தொடர்ந்து பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனிடையே தலைநகர் டெல்லியிலும் குளிர் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்தியா கேட் சாலையில் எதிரே வருபவர்களை பார்க்க முடியாத அளவிற்கு பனிமூட்டம் சூழ்ந்திருந்தது. டெல்லியில் நிலவி வரும் கடும் பனிமூட்டம் காரணமாக 25 ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. மேலும் 2 ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளன மற்றும் 12 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.