‘விரைவில் 7 சதவீத வளர்ச்சியை நாடு எட்டும்’
புதுடில்லி:‘நாட்டின்,
மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, அடுத்த சில காலாண்டுகளில்
அதிகரித்து, வளர்ச்சி பாதையை எட்டும்’ என, ஸ்டாண்டர்டு சார்ட்டடு
வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன் விபரம்:
உள்நாட்டு
உற்பத்தி வளர்ச்சியின் சரிவுகள் முடிந்து, அடுத்த சில
காலாண்டுகளில், 7 சதவீத வளர்ச்சியை, நாடு எட்டும். நாட்டின்
உற்பத்தி வளர்ச்சி, மோசமான காலத்தை தாண்டிவிட்டது.
இருப்பினும், அடுத்த சில காலாண்டுகளில், வளர்ச்சி பாதைக்கு திரும்பி, 7 சதவீத
வளர்ச்சியை எட்டும் என்றாலும், 7.5 சதவீத வளர்ச்சியை எட்டுவதற்கு, மேலும் சில ஆண்டுகள் பிடிக்கும்.
அரசின்
முக்கியமான கொள்கை முடிவுகளால் ஏற்பட்ட சுணக்கங்கள் நீங்கி,
வளர்ச்சி பாதைக்கு திரும்புவதற்கு, குறைந்தபட்சம், நான்கிலிருந்து
ஆறு காலாண்டுகள் பிடிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.ஏப்., – ஜூன் வரையிலான வளர்ச்சி, 13 காலாண்டுகளில் இல்லாத வகையில், 5.7 சதவீதத்தை தொட்டது. தற்போது, அதிலிருந்து மீண்டு வருகிறது. ஜூலை – செப்., வரையிலான காலத்தில், வளர்ச்சியானது, 6.3 சதவீதமாக அதிகரித்தது.
அரசு, தைரியமான சில முடிவுகளை எடுத்து அமல்படுத்தி வருகிறது. குறிப்பாக, ஜி.எஸ்.டி., திவால் சட்டம் ஆகியவை, மிக தைரியமான முடிவுகளாகும். இதனால்,
நாட்டின் பொருளாதாரம் குறுகிய காலத்துக்கு சிரமங்களை
சந்தித்தாலும், நாட்டின் வளர்ச்சிக்கு உரமாக, இந்த முடிவுகள்
இருக்கும்.ஆனால், எப்படி இருந்தாலும், 7.5 சதவீத வளர்ச்சியை எட்ட, இன்னும் சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
மேலும்,
2019ல் பொதுத் தேர்தல் வருகிறது. இது, அரசின் கொள்கை முடிவுகளால்
உருவாகி வரும் நல்ல தாக்கத்தை தாமதப்படுத்தக் கூடும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.