ஓகி புயலில் காணாமல் போன குமரி மீனவர்களை கண்டுபிடிக்க கோரி மாமல்லபுரத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
மாமல்லபுரம்,: காஞ்சிபுரம் மாவட்ட அனைத்து மீனவர் சங்க கூட்டமைப்பு சார்பில், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓகி புயலில் சிக்கி காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்க வலியுறுத்தி மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் சந்துரு தலைமை தாங்கினார்.
கூட்டமைப்பு நிர்வாகிகள் அரவிந்த், கண்ணன், கலைமணி, பஞ்சாட்சரம், லிங்கேஸ்வரன் முன்னிலை வகித்தனர். கோவளம், செம்மஞ்சேரி, புதிய கல்பாக்கம், நெம்மேலி, சூளேரிக்காடு, புதிய நெம்மேலி, பட்டிபுலம், தேவனேரி, மாமல்லபுரம், புது எடையூர் குப்பம், வெண்புருஷம், கொக்கிலமேடு ஆகிய 12 மீனவ கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் கலந்துக் கொண்டனர்.
‘‘கன்னியாகுமரி மாவட்டத்தில் வீசிய ஓகி புயலில் காணாமல் போன மீனவர்களையும் தமிழக அரசு கண்டுபிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடலில் மூழ்கி இறந்துபோன ஒவ்வொரு மீனவரின் குடும்பத்துக்கும் அதிகபட்ச நிவாரணம் வழங்க வேண்டும். சேதமடைந்த படகுகளுக்கு பதிலாக புதிய படகுகளை வழங்கவேண்டும்.
ஓகி புயலில் காணாமல் போ ன மீனவர்களின் பட்டியலை தமிழக அரசு வெளியிட வேண்டும்’ என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு, 10க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்தவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
.