'பணம் வாங்கினாலும் பா.ஜ.,வுக்கே ஓட்டு!': தமிழிசை

தினமலர்  தினமலர்
பணம் வாங்கினாலும் பா.ஜ.,வுக்கே ஓட்டு!: தமிழிசை

சென்னை: ''வாக்காளர்கள் பணம் வாங்கினாலும், பா.ஜ.,வுக்கு தான் ஓட்டளிப்பர்,'' என, தமிழக பா.ஜ., தலைவர், தமிழிசை கூறினார்.

சென்னை, ஆர்.கே.நகரில், பா.ஜ., சார்பில் கரு.நாகராஜன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து, தண்டையார்பேட்டை, திருநாவுக்கரசு தோட்டம், மேயர் பாசுதேவ் நகர் உள்ளிட்ட பகுதிகளில், தமிழிசை ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பின், அவர், நிருபர்களிடம் கூறியதாவது: தொகுதி முழுவதும் பணப் பட்டுவாடா நடக்கிறது. வாக்காளர்களை, வேறு தொகுதிக்கு அழைத்து சென்று, பட்டுவாடா செய்கின்றனர். தினகரன், வெற்றி பெற்று விடுவார் என்ற பயத்தில் தான், நாங்கள் அவரை விமர்சனம் செய்கிறோம் என, அவரது ஆட்கள் சொல்கின்றனர்; இது, மிகப்பெரிய ஜோக்.

ஜெயிலுக்கு சென்றவர்கள், ஜெயிலுக்கு போக வேண்டியவர்கள், ஜாமினில் வந்தவர்கள் மத்தியில், நாங்கள் வெயிலில் அலைந்து ஓட்டு சேகரிக்கிறோம். வாக்காளர்கள், பணம் வாங்கி கொண்டு ஓட்டளிக்க கூடாது. அப்படியே பணம் வாங்கினாலும், அவர்கள், பா.ஜ.,வுக்கு தான் ஓட்டளிப்பர். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை