இரண்டு தொகுதியில் போட்டியிட தேர்தல் கமிஷன் எதிர்ப்பு

தினமலர்  தினமலர்
இரண்டு தொகுதியில் போட்டியிட தேர்தல் கமிஷன் எதிர்ப்பு

லோக்சபா மற்றும் சட்ட சபை தேர்தல்களில், ஒருவரே இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதற்கு, தேர்தல் கமிஷன் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து, தன் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளதாகவும் கூறியுள்ளது.

லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில், ஒருவர், இரண்டு தொகுதிகளில் போட்டியிட அனுமதிப்பதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை, தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது.

அப்போது, தேர்தல் கமிஷன் சார்பில் தெரிவிக்கப்பட்டதாவது: ஒருவர் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டாலும், மக்கள் பிரதி நிதித்துவச் சட்டத்தின்படி, ஒரு தொகுதியின், எம்.பி., அல்லது, எம்.எல்.ஏ.,வாக மட்டுமே இருக்க முடியும்.

அதனால் மற்றொரு தொகுதியில், அவர் ராஜினாமா செய்ய வேண்டும்.அந்தத் தொகுதிக்கு மீண்டும் தேர்தல் நடத்துவதால், அரசுக்கு அதிக செலவாகிறது. அதனால், ஒருவர், ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடும் படி சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும்; அல்லது, ராஜினாமா செய்யும் தொகுதிக்கு இழப்பீட்டை வசூலிக்க வேண்டும்.

எம்.எல்.ஏ, தொகுதிக்கு, ஐந்து லட்சம் ரூபாயும், எம்.பி., தொகுதிக்கு, 10 லட்சம் ரூபாயும் வசூலிக்கலாம் என, பரிந்துரை செய்துள்ளோம். மத்திய அரசுக்கு, 2004 மற்றும் 2016ல் பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளோம்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் மத்திய அரசு தான் திருத்தம் செய்ய வேண்டும்.இவ்வாறு தெரிவிக்கப் பட்டது.இதைத் தொடர்ந்து, இது குறித்து பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கு, அமர்வு உத்தரவிட்டுள்ளது.

- நமது நிருபர் -

மூலக்கதை