இன்று பாகிஸ்தானில் தேர்தல் சிறையில் உள்ள நவாஸ் ஷெரீப் உடல்நிலை பாதிப்பால் அவதி: வெளி மருத்துவமனைக்கு பரிந்துரைத்தும் ஏற்க மறுப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
இன்று பாகிஸ்தானில் தேர்தல் சிறையில் உள்ள நவாஸ் ஷெரீப் உடல்நிலை பாதிப்பால் அவதி: வெளி மருத்துவமனைக்கு பரிந்துரைத்தும் ஏற்க மறுப்பு

இஸ்லாமாபாத்: இன்று பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில், சிறையில் உள்ள நவாஸ் ஷெரீப் உடல்நிலை பாதிப்பால் அவதியுற்று வருகிறார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், ஊழல் வழக்கில் 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, ராவல்பிண்டி அடியலா சிறையில் அடைக்கப்பட்டார்.

இருதய நோயாளியான அவருக்கு சர்க்கரை நோயும் தாக்கப்பட்டு உள்ளது. தற்போது சிறையில் நீர்ப்போக்கு பிரச்னையால் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளார்.

அவரை நேற்று முன்தினம் ‘பிம்ஸ்’ என்று அழைக்கப்படுகிற பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் கல்லூரி மருத்துவர்கள் குழுவினர் பரிசோதித்தனர். இதுகுறித்து, அக்குழுவினர் கூறுகையில், ‘நவாசுக்கு நீர்ப்போக்கு பிரச்னையும் கடுமையாக உள்ளது.

இசிஜி பரிசோதனை செய்யப்பட்டது. அவர் ஏற்கனவே எடுத்து வருகிற மாத்திரை, மருந்துகளை தொடருமாறு அறிவுறுத்தப்பட்டது’ என்று குறிப்பிட்டனர்.

ஏற்கனவே சந்தித்த மருத்துவர் குழு, அவரை மருத்துவமனையில் சேர்ந்து, தொடர்ந்து சிகிச்சை செய்துகொள்ளுமாறு பரிந்துரை செய்தது. ஆனால், அவர் அதை ஏற்க மறுத்துவிட்டதாகவும், சிறையிலேயே சிகிச்சை பெறுவதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.



இதுகுறித்து ஓய்வு பெற்ற ராணுவ டாக்டர் அசார் முகமது கியானி கூறுகையில், ‘‘இதயத்துடிப்பு இயல்பாக இல்லை. ரத்தத்தில் யூரியாவின் அளவு அதிகமாக இருப்பதால் சிறுநீரகத்தை பாதிக்கலாம்.

மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறுமாறு சிறை நிர்வாகமும், தற்காலிக அரசும் பரிந்துரை செய்தன. ஆனால், அவர் ஏற்கவில்லை’’ என்றார்.

இதற்கிடையே, பாகிஸ்தானில் இன்று பொதுத்தேர்தல் நடப்பதால், இவ்விவகாரம் தேர்தலை மையப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.



.

மூலக்கதை