ரெய்னா செய்த உதவியை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன்...... நெகிழும் இங்கிலாந்து பஸ் டிரைவர்
லண்டன்: இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா செய்த உதவியை தன் வாழ்நாளில் மறக்கமுடியாது என இங்கிலாந்தை சேர்ந்த பேருந்து ஓட்டுநர் தெரிவித்துள்ளார். ஜெப் குட்வின் என்பவர் இந்திய அணியினர் செல்லும் பேருந்தின் ஓட்டுநராக 1999-ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். இந்திய அணி எப்பொழுது இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும் இவர்தான் அவர்கள் பயணிக்கும் பேருந்தின் ஓட்டுநராக இருப்பார். மேலும் இந்திய வீரர்களுடன் நெருங்கிய தொடர்பும் இவருக்கு உள்ளது. இந்நிலையில் அவர் அளித்த பேட்டியை பிசிசிஐ தனது இணையத்தில் பகிர்ந்துள்ளது. அதில் அவர் கூறியதாவது: இந்திய அணி வீரர்கள் மற்ற அணியினரை விட மிகவும் ஒழுக்கமாக நடந்து கொள்வர். போட்டி முடிந்ததுமே பேருந்துக்கு வந்து விடுவார்கள். முன்னாள் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் டிரெஸ்சிங் ரூமில் நள்ளிரவு இரண்டு மணிவரை குடித்து கும்மாளமடித்துவிட்டுதான் பேருந்துக்கு வருவார்கள். இப்போதைய அணியினர் அதற்கு பரவாயில்லை. இந்திய அணி வீரர் சுரேஷ் ரெய்னா செய்த உதவியை என் வாழ்நாளில் மறக்க முடியாது. எனது மனைவி உடல்நலம் சரியில்லாமல் இருந்த நேரத்தில் அவரது ஜெர்சியை ஏலத்தில் விட்டு அதன்மூலம் கிடைத்த பணத்தை என்னிடம் அளித்தார். என் மனைவி உயிருடன் இருப்பதற்கு அவர்தான் காரணம். மேலும் தோனி தான் உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பர். சகால் என்னை \'ஓல்டு மேன்\' என்று செல்லமாக அழைப்பார். 21 வயதே ஆன குட்வினின் மகனும் இந்திய அணியின் பேருந்து ஓட்டுனராக இருந்து அவர்களை இங்கிலாந்து முழுவதும் அழைத்து சென்றுள்ளார்.