18 பேர் தகுதி நீக்க வழக்கு: 3வது நீதிபதி இன்று விசாரணை

தினமலர்  தினமலர்
18 பேர் தகுதி நீக்க வழக்கு: 3வது நீதிபதி இன்று விசாரணை

சென்னை : சசிகலா ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கை, சென்னை உயர்நீதிமன்றத்தில், இன்று(ஜூலை 23) முதல் மூன்றாவது நீதிபதி, சத்திய நாராயணன் விசாரிக்கிறார். தொடர்ந்து ஐந்து நாட்கள், விசாரணை நடைபெற உள்ளது.

முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவை அடுத்து, அ.தி.மு.க.,வில் பிளவு ஏற்பட்டது. ஆட்சியிலும் மாற்றம் ஏற்பட்டு, முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்றார். 'பழனிசாமிக்கு எங்கள் ஆதரவு இல்லை; அவரை மாற்ற வேண்டும்' என, சசிகலா ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 18 பேர், கவர்னரிடம் மனு அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ், 18 எம்.எல்.ஏ.,க்களையும் தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.

இது குறித்த வழக்கு ஐகோர்ட்டில் நடைபெற்றுவருகிறது. மேலும் இந்த வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உள்ளிட்ட இரண்டு நீதிபதிகள் அமர்வு விசாரணை நடத்தியது. விசாரணையில் இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் 3-வது நீதிபதிக்கு வழக்கு விசாரணை மாற்றப்பட்டது. தொடர்ந்து வரும் 23-ம் தேதி முதல் தொடர்ந்து 5 நாட்கள் வழக்கு விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, இந்த வழக்கின் விசாரணை இன்று துவங்குகிறது. தொடர்ந்து ஐந்து நாட்கள் விசாரணை நடக்க உள்ளது. அதனால், விரைவில் வழக்கு முடிவுக்கு வந்து, தீர்ப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை