போலீஸ்காரரை கடத்தி கொன்ற 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை : காஷ்மீரில் பாதுகாப்பு படை அதிரடி

தினகரன்  தினகரன்
போலீஸ்காரரை கடத்தி கொன்ற 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை : காஷ்மீரில் பாதுகாப்பு படை அதிரடி

ஸ்ரீநகர் : காஷ்மீரில் கடந்த வெள்ளிக்கிழமை போலீஸ்காரரை கடத்தி கொலை செய்த தீவிரவாதிகள் 3  பேர் பாதுகாப்பு படையால் சுட்டுக் கொல்லப்பட்டனர். காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தை சேர்ந்த போலீஸ்காரர் சலீம் ஷா. விடுமுறைக்காக வீட்டுக்கு சென்றிருந்த அவர், கடந்த வெள்ளிக்கிழமை தீவிரவாதிகளால் கடத்தி செல்லப்பட்டார். நேற்று முன்தினம் உடல் முழுவதும் சித்ரவதை செய்யப்பட்ட காயங்களுடன் அவரது சடலம் மீட்கப்பட்டது. இந்நிலையில், குத்வானி பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த ரகசிய தகவலை தொடர்ந்து, பாதுகாப்பு படையினரும் போலீசாரும் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், அங்கிருந்து ஆயுதங்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. கதுவா மாவட்டத்தில் ஹிராநகர் பகுதியில் உள்ள சர்வதேச எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் எல்லைப் பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பகுதியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, காலை 6.45 மணியளவில் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் மர்ம நபர் நடமாட்டம் தெரிந்தது. அவரை வீரர்கள் எச்சரித்தனர். எனினும், அவர் மேலும் ஊடுருவி வர முயன்றதால் வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், அவர் கொல்லப்பட்டார்.

மூலக்கதை