தனியார் நிறுவன லாக்கரில் கேட்பாரின்றி கிடந்த ரூ.100 கோடி சொத்து ஆவணம் பறிமுதல்
பெங்களூரு: பெங்களூருவில் பவுரிங் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் லாக்கரில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் ரூ.3.90 கோடி ரொக்கம், ரூ.5 கோடி மத்ிப்பிலான வைரம், தங்க பிஸ்ெகட்டுகள், ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து தொழிலதிபர் ஒருவரிடம் விசாரித்து வருகின்றனர். பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனமான ‘பவுரிங் இன்ஸ்டிடியூட்’டில் விளையாட்டுப் பொருட்கள், காலணிகள், துணி போன்றவை வைப்பதற்காக மொத்தம் 126 லாக்கர்கள் உள்ளன. இவற்றை பயன்படுத்துவோர் நீண்ட நாட்களாக உபயோகப்படுத்தாமல் வைத்திருந்ததால், இந்த நிறுவனத்தினர் சமீபத்தில் அவர்களுக்கு கடிதம் அனுப்பினர். அதில், ‘குறிப்பிட்ட நாளில் வந்து, லாக்கர்களில் உள்ள பொருட்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும். இல்லை என்றால், லாக்கர்கள் உடைக்கப்படும்’ என கூறியிருந்தனர். அதன்படி, 123 பேர் குறிப்பிட்ட நாளில் வந்து லாக்கர்களை திறந்ததுடன், அவற்றை மீண்டும் பயன்படுத்துவதாக உறுதி அளித்து விட்டுச் சென்றனர். ஆனால், 3 லாக்கர்களின் உரிமையாளர்கள் மட்டும் வரவில்லை.எனவே, இந்த லாக்கர்களை பயன்படுத்தும் குஜராத்தை சேர்ந்த நிதி நிறுவனம் மற்றும் தொழிலதிபரான அவினாஷ் என்பவருக்கு இறுதி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், அப்போதும் அவர்கள் யாரும் வரவில்ைல. இதையடுத்து, பவுரிங் நிறுவனத்தினர் நேற்று இந்த லாக்கர்களை உடைத்தனர். அப்போது அதில், கத்தை கத்தையாக ரொக்கப்பணம், வைரம், தங்க பிஸ்ெகட்டுகள், பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் இருந்தன. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நிர்வாகத்தினர், உடனடியாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அந்த அதிகாரிகள் விரைந்து வந்து சோதனையை தீவிரப்படுத்தினர். இந்த பணம், நகைகள், சொத்து ஆவணங்கள் அவினாசுக்கு சொந்தமானதா? அல்லது வேறு யாருக்காவது சொந்தமானதா? என அவர்கள் விசாரித்து வருகின்றனர்.இது குறித்து விடுதியின் செயலாளர் ஸ்ரீகாந்த் கூறுகையில், ‘‘லாக்கரில் கைப்பற்றப்பட்ட பணம், நகை, சொத்து ஆவணங்கள் தொடர்பாக ஒரு சிலர் என்னை சந்தித்து ஐந்து கோடி ரூபாய் பணம் கொடுக்க தயாராக உள்ளதாகவும், இந்த பணத்துடன் கைப்பற்றப்பட்ட பணத்தையும் தாங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்றும் கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்களை மட்டும் கொடுத்து விடுங்கள் என்றும் கேட்டனர். அப்போது நான் வருமான வரித்துறையினரை அழைத்தவுடன் அவர்கள் ஓடி விட்டனர்’’ என்றார்.