தென் ஆப்ரிக்கா 124 ரன்னில் சுருண்டது : வலுவான நிலையில் இலங்கை

தினகரன்  தினகரன்
தென் ஆப்ரிக்கா 124 ரன்னில் சுருண்டது : வலுவான நிலையில் இலங்கை

கொழும்பு: தென் ஆப்ரிக்க அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி வலுவான முன்னிலை பெற்றுள்ளது. சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த இலங்கை அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 277 ரன் எடுத்திருந்தது (86 ஓவர்). அகிலா தனஞ்ஜெயா 16, ரங்கனா ஹெராத் 5 ரன்னுடன் நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர்.இந்த ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 74 ரன் சேர்த்தது. ஹெராத் 35 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அகிலா தனஞ்ஜெயா 43 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இலங்கை அணி 338 ரன்னுக்கு முதல் இன்னிங்சை இழந்தது (104.1 ஓவர்). தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் மகராஜ் 41.1 ஓவரில் 10 மெய்டன் உட்பட 129 ரன் விட்டுக்கொடுத்து 9 விக்கெட் வீழ்த்தினார். ரபாடா 1 விக்கெட் எடுத்தார்.  அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்ரிக்கா, இலங்கை ஸ்பின்னர்களை சமாளிக்க முடியாமல் 34.5 ஓவரில் 124 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. கேப்டன் டு பிளெஸ்ஸி 48, டி காக் 32, அம்லா 19, பவுமா 11 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இலங்கை பந்துவீச்சில் அகிலா 5, தில்ருவன் 4, ஹெராத் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 214 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை, 2ம் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 151 ரன் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. குணதிலகா 61, தனஞ்ஜெயா டி சில்வா 0, குசால் மெண்டிஸ் 18 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். கருணரத்னே 59, மேத்யூஸ் 12 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று 3வது நாள் ஆட்டம் நடக்கிறது.

மூலக்கதை