இளம்பெண்ணை 50 பேர் பலாத்காரம் : வழக்கு பதிய மறுத்த 2 எஸ்ஐ சஸ்பெண்ட்

தினகரன்  தினகரன்
இளம்பெண்ணை 50 பேர் பலாத்காரம் : வழக்கு பதிய மறுத்த 2 எஸ்ஐ சஸ்பெண்ட்

சண்டிகர்: அரியானாவின் பஞ்ச்குலா மோர்னி ஹில்ஸ் பகுதியில் தனியார் விருந்தினர் விடுதி உள்ளது. இதில், 12 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் அறையை சுத்தம் செய்யும் பணி தருவதாக கூறி 21 வயது இளம்பெண் ஒருவரை அந்த விடுதியின் உரிமையாளர் சுனில் குமார் கடந்த 15ம் தேதி அழைத்து சென்றார். அங்கு அறையில் பூட்டி வைத்து அந்த பெண்ணை பலாத்காரம் செய்தார். பின்னர் அவருக்கு மது மற்றும் போதை மருந்து கொடுத்து மயக்கமடைய செய்து, 18ம் தேதி வரை தினமும் 10க்கும் மேற்பட்டோர் என மொத்தம் 50 பேர் அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய வைத்தார். இந்நிலையில், வேலைக்கு சென்ற தனது மனைவி வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது கணவர் அங்கு சென்று பார்த்தபோது மனைவியை அறையில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்யப்படுவது தெரிய வந்தது. உடனே மனைவியை மீட்ட கணவர், இது தொடர்பாக முதலில் பஞ்ச்குலா காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றார்.ஆனால், அவர்களின் வீடு அப்பகுதியில் இல்லை என்பதால் சண்டிகர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்கும்படி அங்கிருந்த பெண் உதவி எஸ்ஐ தெரிவித்துள்ளார். இதையடுத்து, சண்டிகர் சென்று புகார் அளித்தார்.. இது தொடர்பாக சண்டிகர் கிழக்கு டிஎஸ்பி சதீஷ்குமார் கூறுகையில், `அந்த பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது.இது தொடர்பாக விடுதி உரிமையாளர் சுனில் குமார், அவரது நண்பர் அவதார் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கு பதிவு செய்ய மறுத்த பெண் உதவி எஸ்ஐ  உட்பட  2 உதவி எஸ்ஐ.க்களும், ஒரு போலீஸ்காரரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்’’ என்றார்.

மூலக்கதை