சூர்யா படம் விலகியது ஏன்? - அல்லு சிரிஷ் விளக்கம்

தினமலர்  தினமலர்
சூர்யா படம் விலகியது ஏன்?  அல்லு சிரிஷ் விளக்கம்

லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, சாயிஷா, மோகன்லால் மற்றும் பலர் நடிக்கும் சூர்யாவின் 37-வது படத்தில் தெலுங்கு நடிகரான அல்லு சிரிஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்தார். ஆனால், அதன்பின் திடீரென ஆர்யா அந்தப் படத்தில் இணைந்தார்.

அல்லு சிரிஷுக்கு பதிலாகத்தான் ஆர்யா நடிக்கிறார் என்று தகவல் வெளியானது. ஆனால், தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து அது குறித்து எந்த விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

இதனிடையே, சூர்யாவின் 37-வது படத்திலிருந்து விலகியது ஏன் என்பது குறித்து டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார் அல்லு சிரிஷ். அதில், “சூர்யா 37 படத்தில் என் பங்கு என்ன என்பது குறித்து தெரிவிக்க ஆசைப்படுகிறேன். அந்தப் படத்தில் நடிக்க வேண்டிய தேதியில் என்னுடைய மற்றொரு படமான 'ஏபிசிடி' படத்தின் தேதிகள் இருந்தன. அதனால் சிக்கல் ஏற்பட்டது. அவற்றை மாற்றுவதற்கும் வழியில்லை. இரண்டு படங்களின் நலனைக் கருதி, நானாகவே தான் சூர்யா 37 படத்திலிருந்து விலகிக் கொண்டேன். இயக்குனர் கே.வி.ஆனந்த் என்னுடைய நிலையை நன்றாகப் புரிந்து கொண்டு அதற்கு சம்மதித்தார்.

அந்தப் படத்தில் நடிப்பதற்கு உண்மையிலேயே மிகவும் ஆவலாக இருந்தேன். ஆனால், விலக வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது. எனக்கு வாய்ப்பளித்த கே.வி. ஆனந்த், சூர்யா, லைகா புரொடக்சன்ஸ் ஆகியோருக்கு நன்றி. மொத்த குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துகள் எப்போதும் உண்டு. இந்த அற்புதமான குழுவினருடன் எதிர்காலத்தில் பணிபுரிய வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.

அல்லு சிரிஷ் நாயகனாக அறிமுகமான 'கௌரவம்' படம் தமிழ், தெலுங்கில் 2013ம் ஆண்டில் வெளியானது. அதன் பின் அவர் தமிழ்ப் படம் எதிலும் நடிக்கவில்லை.

மூலக்கதை