உரிமம் பெறாத உணவகங்களுக்கு கிடுக்கிப்பிடி; 10 வலைதள நிறுவனங்கள் பட்டியலில் இருந்து நீக்க உத்தரவு
புதுடில்லி : உரிமம் இன்றி செயல்படும் உணவகங்களை, சேவைப் பட்டியலில் இருந்து உடனடியாக நீக்குமாறு, வலைதளம் வாயிலாக உணவு வழங்கும் சேவையில் ஈடுபட்டுள்ள, 10 நிறுவனங்களுக்கு, உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையமான – எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., உத்தரவு பிறப்பித்துள்ளது.
தற்போது, வலைதளம் மூலம், விரும்பிய ஓட்டல்களில் இருந்து விதவிதமான உணவு வகைகளை வீட்டிற்கே வரவழைத்து உண்போர் எண்ணிக்கை பெருகி வருகிறது.இதற்கு, மொபைல் போனில், ‘ஆர்டர்’ கொடுத்த அரை மணி நேரத்தில், கூடுதல் கட்டணமின்றி, சுடச் சுட உணவு வகைகள், ‘சப்ளை’ செய்யப்படுவது தான், முக்கிய காரணம்.
இவ்வகை சேவையில், ‘ஸொமாட்டோ, உபர்ஈட்ஸ்’ போன்ற மின்னணு சந்தை நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இவை, உணவகங்களில் இருந்து உணவைப் பெற்று, நுகர்வோரின் வீட்டிற்கே சென்று கொடுக்கின்றன.
ஒப்பந்தம் :
இதற்காக, இந்நிறுவனங்கள், பல்வேறு உணவகங்களுடன் ஒப்பந்தம் செய்து, குறிப்பிட்ட தொகையை சேவை கட்டணமாக பெற்றுக் கொள்கின்றன.சமீப காலமாக, வலைதள நிறுவனங்கள் சப்ளை செய்யும் உணவு வகைகள் குறித்த புகார்கள் அதிகரித்துள்ளன. தரமற்ற உணவு வகைகள் வழங்கப்படுவதாக, நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான புகார்கள், நுகர்வோர் நல அமைச்சகத்தில் குவிந்து வருகின்றன.
மோசமான சூழலில், சுகாதாரமற்ற சமையற்கூடத்தில் உணவு வகைகள் தயாரிக்கப்படுவது தான், புகார்கள் எழக் காரணம் என, கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, நுகர்வோரின் ஆரோக்கிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ள, இப்பிரச்னைக்கு தீர்வு காண, வலைதளங்கள் வாயிலாக உணவு சேவையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு, புதிய விதிமுறைகளை, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., அறிமுகப்படுத்தியது.
அதன்படி, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., உரிமம் பெற்ற உணவகங்களுடன் தான், வலைதளம் வாயிலாக உணவு சப்ளை செய்யும் நிறுவனங்கள், ஒப்பந்தம் செய்ய வேண்டும். மேலும், வலைதளத்தில் உணவகங்களை பட்டியலிடும்போது, அவற்றின் உரிம எண்களையும் பதிவு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகள் அமலுக்கு வந்தன.
தரமான உணவு :
ஆனால், சில வலைதள நிறுவனங்கள் இந்த விதிகளை மீறி, உரிமம் பெறாத உணவகங்களையும் பட்டியலிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஸொமா ட்டோ, புட்பாண்டா உள்ளிட்ட, 10 மின்னணு உணவுச் சேவை நிறுவனங்களுக்கு, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., கடிதம் அனுப்பியுள்ளது.
அதில், ‘உரிமம் பெறாத உணவகங்களை, பட்டியலில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும்; உரிமம் பெற்ற உணவகங்களின் பட்டியலையும், அவற்றின் உரிமம் மற்றும் ஒப்பந்த நகல்களை, வரும், 31ம் தேதிக்குள் வழங்க வேண்டும்’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால், நுகர்வோருக்கு பாதுகாப்பான, தரமான உணவு கிடைக்க வழி ஏற்படும் என, சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
எந்தெந்த நிறுவனங்கள்?
புட் கிளவுட், புட்மிங்கோ, புட்பாண்டா, பாக்ஸ்–8, ஜஸ்புட், லைம்ட்ரே, ஸ்விக்கி, உபர்ஈட்ஸ், ஸொமாட்டோ, பாஸோஸ் ஆகிய, 10 நிறுவனங்களுக்கு, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., உரிமம் பெறாத உணவகங்களின் சேவையை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.