போலீசில் புகார் அளித்த பிருத்விராஜ் பட இயக்குனர்

தினமலர்  தினமலர்
போலீசில் புகார் அளித்த பிருத்விராஜ் பட இயக்குனர்

இரண்டு வாரங்களுக்கு முன்பு மலையாளத்தில் பிருத்விராஜ் - பார்வதி நடித்த மை ஸ்டோரி என்கிற படம் வெளியானது. இந்தப்படம் உருவானபோதே இயக்குனர் ரோஷினி தினக்கருக்கும், பிருத்விராஜூக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு, அதனால் படப்பிடிப்பு தாமதமாகி, படத்தின் பட்ஜெட்டும் 12 கோடியில் இருந்து 18 கோடியாக உயர்ந்தது. மேலும் படம் வெளியானபோது எதிர்பார்த்த வரவேற்பும் கிடைக்கவில்லை..

இந்தப்படத்தை பற்றி சோஷியல் மீடியாவில் சிலர் வேண்டுமென்றே தவறாக தகவல் பரப்பி படத்தை ஓடவிடாமல் தடுக்கிறார்கள் என குற்றம் சாட்டிய இயக்குனர் ரோஷினி தினகர், தற்போது எர்ணாகுளம் போலீஸ் ஐ.ஜியிடம் நேரடியாகவே புகார் ஒன்றை அளித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் இதுகுறித்து ஒரு ஆச்சர்யமான தகவலையும் கூறியுள்ளார் ரோஷினி.. அதாவது பிருத்விராஜ் - பார்வதி நடித்த இந்த மை ஸ்டோரி படத்தை பற்றி தவறாக கருத்து பரப்பி வரும் அதே நபர்கள் தான், இந்த இருவரும் இணைந்து நடித்து கடந்த வாரம் வெளியாகியுள்ள அஞ்சலி மேனனின் கூடே படத்தை பற்றி ஆஹா, ஓஹோவென புகழ்ந்து பாராட்டி செய்தி பரப்பி வருகிறார்களாம். அவர்கள் மீது தான் தற்போது நடவடிக்கை எடுக்கும்படி புகார் கொடுத்துள்ளாராம் ரோஷினி தினகர்.

லேட்டஸ்ட் நிலவரப்படி தற்போது தியேட்டர்களில் இருந்து தனது படத்தை எடுத்துவிட்டு, அடுத்த மாதம் மீண்டும் தியேட்டர்களில் திரையிட உள்ளதாக அறிவித்துள்ளார் ரோஷினி தினகர்.

மூலக்கதை