Fresnes சிறைச்சாலை அதிகாரிகளின் மகிழுந்துகளுக்கு தீ வைப்பு!!
நேற்று புதன்கிழமை நள்ளிரவு, Fresnes சிறைச்சாலை அதிகாரிகளுடைய மூன்று மகிழுந்துக்கள் தீ மூட்டப்பட்டுள்ளன. குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
Val-de-Marne இல் உள்ள Fresnes சிறைச்சாலையின் தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அதிகாரிகளின் மூன்று மகிழுந்துகளே தீயூட்டப்பட்டுள்ளன. 12.20 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பயங்கர வெடிப்பு சத்தத்துடன் மகிழுந்து வெடித்து எரிந்துள்ளது. இந்த செயலில் ஈடுபட்ட மர்ம நபர்களை Haÿ-les-Roses பகுதி காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
தவிர, இதுபோன்ற சம்பவம் இடம்பெறுவது இது இரண்டாவது தடவை என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு மாதத்திற்கு முன்பாக இதுபோன்று சிறைச்சாலை அதிகாரி ஒருவரின் மகிழுந்து எரியூட்டப்பட்டிருந்தது.