மதுரை அருகே தோப்பூரில் ரூ.1,500 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைகிறது

PARIS TAMIL  PARIS TAMIL
மதுரை அருகே தோப்பூரில் ரூ.1,500 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைகிறது

ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்தபோது தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதினார்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்ற பிறகு கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ந்தேதி மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி அருண் ஜெட்லி தாக்கல் செய்தார்.

அப்போது எய்ம்ஸ் மருத்துவமனை ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், தமிழ்நாடு, இமாச்சல பிரதேசம், அசாம் ஆகிய மாநிலங்களில் தொடங்கப்படும் என்ற தகவலை அறிவித்தார். எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக தமிழகத்தில் தஞ்சாவூரில் உள்ள செங்கிப்பட்டி, மதுரையில் உள்ள தோப்பூர், செங்கல்பட்டு, ஈரோட்டில் உள்ள பெருந்துறை, புதுக்கோட்டை ஆகிய 5 இடங்களை தேர்வு செய்து தமிழக அரசு, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது.

அதன் அடிப்படையில் தமிழக அரசு குறிப்பிட்டு தந்த 5 இடங்களை பார்வையிடுவதற்காக மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் தாரித்ரி பாண்டா தலைமையில் உயர்மட்டக்குழுவினர் வந்தனர். அவர்களும் பார்வையிட்டு அது தொடர்பான அறிக்கையை மத்திய அரசிடம் வழங்கினார்கள்.

2015-ம் ஆண்டில் தொடங்கிய இந்த பயணத்துக்கு எந்த ஒரு முற்றுப்புள்ளியும் இல்லாமல் நீண்டு கொண்டே சென்றது. பட்ஜெட்டில் தமிழ்நாட்டோடு சேர்ந்து அறிவிக்கப்பட்ட மற்ற மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்ட நிலையில், தமிழகம் மட்டும் புறக்கணிக்கப்பட்டு விட்டதாக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர்.

இந்தநிலையில் இதுதொடர்பாக ஐகோர்ட்டு மதுரை கிளையில் பொதுநல வழக்கை கே.கே.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்தார். அந்த வழக்கு அவ்வப்போது கோர்ட்டில் விசாரணைக்கு வந்து, நீதிபதிகள் தீர்ப்பு வழங்கிய வண்ணம் இருந்தனர். கடைசியாக ஜூன் மாதம்(2018) இறுதிக்குள் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமைய உள்ளது என்பதை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று கூறி, ஜூன் மாதம் 20-ந்தேதிக்கு(நேற்று) வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இந்தநிலையில் கடந்த 18-ந்தேதி (திங்கட்கிழமை) டெல்லியில் இதுதொடர்பாக நடந்த கூட்டத்தில் தமிழகத்தில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட இருப்பதாக முடிவு செய்து, அதற்கான அறிவிப்பாணையை தமிழக அரசுக்கு, மத்திய அரசு அனுப்பியுள்ளது. 3 ஆண்டுகளாக நீடித்த தமிழகத்தின் கோரிக்கைக்கு தீர்வு கிடைத்து இருக்கிறது.

இதுதொடர்பான அறிவிப்பை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று அறிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது சிறந்த மருத்துவ சிகிச்சையை மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற வகையில் எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்தில் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தார். தற்போது எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் மதுரையில் அமைக்கப்படும் என்ற ஆணையை சுகாதாரத்துறை செயலாளருக்கு மத்திய அரசு அனுப்பி இருக்கிறது.

இந்த மருத்துவமனை மதுரைக்கு அருகில் இருக்கும் தோப்பூர் என்ற இடத்தில் ரூ.1,500 கோடி மதிப்பில் 200 ஏக்கரில் அமைய இருக்கிறது. இதில் 750 படுக்கை வசதிகளுடன் கூடிய நவீன மருத்துவமனை, 100 எம்.பி.பி.எஸ். இடங்கள், 60 செவிலியர்கள் பயிற்சி பெறும் விதமாகவும், படிப்பதற்கான வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் அமைவதற்கு மத்திய அரசுக்கு, தமிழக அரசு அத்தனை உதவிகளையும் செய்யும் என்பதை இந்த தருணத்தில் தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

இந்த பேட்டியின் போது சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் உடன் இருந்தனர்.

எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை மத்திய உயர்மட்டக்குழுவினர் தேர்வு செய்து அனுப்பி இருந்தாலும், தமிழக அரசு அடுத்த கட்டமாக 2 நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது.

அதாவது, முதலாவதாக அமைச்சரவை கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும். அடுத்ததாக, அதில் தமிழக அரசு இது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்து, தீர்மானமாக நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும்.

அப்படி செய்த பின்னர் தான், மதுரை தோப்பூரில் கட்டுமான பணிகள் தொடங்கும். இந்த பணிகள் ஓராண்டுக்கு மேல் நீடிக்கும் என சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க மதுரை தோப்பூரை தேர்வு செய்ததற்காக பிரதமருக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி கூறி கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மதுரை மாவட்டம், தோப்பூரில் புதிய அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தை (எய்ம்ஸ்) நிறுவுவதற்காக தமிழக மக்கள் சார்பிலும், எனது தனிப்பட்ட சார்பிலும் உங்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.

தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய மக்களும், பல்வேறு தரப்பினரும் உயர்ரக மருத்துவ சிகிச்சையை பெறும் வகையிலும், தரமான மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி வசதிகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக, இந்த மாநிலத்தில் எய்ம்ஸ் போன்ற தரமான மருத்துவமனை அமையவேண்டும் என்பதில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கவனமாக இருந்தார் என்பதை இப்போது நினைவுகூர்கிறேன்.

அந்த வகையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைப்பதற்கு தமிழகத்தில் 5 தகுதி வாய்ந்த இடங்கள் பரிந்துரைக்கப்பட்டன. அந்த பெருமைமிகு எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்கும் திட்டத்துக்காக மதுரையில் தோப்பூரை மத்திய அரசு தேர்வு செய்துள்ளதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது.

தமிழகம் பரிந்துரைத்த 5 இடங்களில் ஒன்றான தோப்பூரை தேர்வு செய்ததன் மூலம் இந்தத் திட்டத்தை அடுத்த நிலைக்கு கொண்டு சென்றதற்கு உங்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி கூறுகிறேன்.

இந்தத் திட்டப் பணிகள் உடனடியாக தொடங்குவதற்கான அனைத்து தேவையான ஆதரவை மத்திய அரசுக்கு வழங்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர், முதன்மைச் செயலாளர் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 

மூலக்கதை