சாலையில் குப்பை வீசியவரை கண்டித்த அனுஷ்கா சர்மா: சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலானது

தினகரன்  தினகரன்
சாலையில் குப்பை வீசியவரை கண்டித்த அனுஷ்கா சர்மா: சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலானது

மும்பை: காரில் சென்றபோது பிளாஸ்டிக் குப்பையை சாலையில் வீசிய வாலிபரை நடிகையும் கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா கண்டித்தார். நடிகை அனுஷ்கா சர்மா, மும்பையில் சமீபத்தில் தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, முன்புறம் ஒரு கார் சென்றது. அந்த காரை ஓட்டிய வாலிபர், பிளாஸ்டிக் குப்பையை சாலையில் வீசினார். இதனை கவனித்த அனுஷ்கா சர்மா, தனது கார் கண்ணாடியை கீழே இறக்கி அந்த வாலிபரை கண்டித்தார். ‘‘சாலையில் ஏன் குப்பையை வீசுகிறீர்கள். தயவு செய்து கவனமாக இருங்கள். பிளாஸ்டிக் குப்பைகளை நீங்கள் வீசக்கூடாது’’ என்று அனுஷ்கா கண்டிப்புடன் கூறியிருக்கிறார்.இந்த காட்சியை அனுஷ்கா சர்மா வீடியோ காட்சியாக பதிவு செய்திருந்தார். இந்த வீடியோவை அவரது கணவர் விராட் கோலி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்தார். அத்துடன் இந்த சம்பவம் குறித்து விராட் கோலி தனது கருத்தையும் பதிவு செய்திருந்தார். ‘‘உயர்ரக காரில் பயணம் செய்கிறார்கள். ஆனால், அவர்கள் மூளையை மட்டும் பறிகொடுத்து விடுகிறார்கள். இந்த மக்கள் நமது நாட்டை தூய்மையாக வைத்து கொள்ள மாட்டார்களா? இது போன்றவர்களை கண்டால் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்’’ என்று அவர் குறிப்பிட்டிருந்தார். டிவிட்டரில் விரார்ட் கோலி பதிவேற்றம் செய்த இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. அனுஷ்கா சர்மாவின் இந்த நடவடிக்கையை சிலர் பாராட்டியுள்ள அதேவேளையில், வேறு சிலர் இது விளம்பரம் தேடுவதற்கான முயற்சி என்று விமர்சித்துள்ளனர். இதற்கிடையே, குப்பை வீசியதற்காக அனுஷ்கா சர்மாவால் கண்டிக்கப்பட்ட வாலிபரின் பெயர் அர்ஹான் சிங் எனத் தெரியவந்ததுள்ளது. இந்த சம்பவம் குறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், ‘‘குப்பை வீசியதற்காக அனுஷ்கா சர்மாவிடம் மன்னிப்பு கேட்டு விட்டேன். ஆனாலும் அனுஷ்கா கொஞ்சம் பொறுமை காத்திருக்கலாம்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை