உன் போல் யாருமில்லை இந்த மண் மேலே...

தினமலர்  தினமலர்
உன் போல் யாருமில்லை இந்த மண் மேலே...

தந்தை என்பவர், பிள்ளைகளுக்கு நண்பனாக, வழிகாட்டியாக, ஆசை மற்றும் கனவுகளை நிறைவேற்றும் உன்னத உறவாக திகழ்கிறார். தாயின் அன்புக்கு சிறிதளவும், குறைவதில்லை தந்தையின் தியாகம்.

பிள்ளைகளை தன் தோளில் சுமந்து உலகத்தை காட்டுபவர் தான் தந்தை. பிள்ளைகள் வாழ்வில் சிறந்த நிலைக்கு வருவதற்காக, தன்னலமற்ற தியாகத்துடன் ஆயுள் முழுவதும் உழைப்பவர் தந்தை. தந்தையின் உழைப்புக்கு பிள்ளைகள் மரியாதை செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜூன் மூன்றாவது ஞாயிறு (ஜூன் 17) உலக தந்தையர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இத்தினம் மேலைநாட்டிலிருந்து வந்திருந்தாலும் இந்தியாவில் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இன்று அனைவரும் தந்தைக்கு நேரிலோ அல்லது அலைபேசியிலோ வாழ்த்துக்களை தெரிவிக்கலாம்.

உற்ற தோழன்


தன் பிள்ளையின் அழுகை, சிரிப்பு, கண்ணீர், சந்தோஷம், தோல்வி, வெற்றி என அனைத்து தருணங்களிலும் பங்கெடுத்துக்கொள்பவர் தந்தை. சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு, தந்தையை மதிக்க கற்றுத்தருவதே இதன் நோக்கம். ஆயுள் முழுக்க சுமந்த, கடைசி காலத்தில் கஷ்டப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தந்தையை தந்தையும் குழந்தைகளுக்கென நேரம் ஒதுக்கி, அவர்களுக்கு நல்லொழுக்கங்களை கற்றுத்தர வேண்டும்.

எப்படி வந்தது



அமெரிக்காவில் 1909ல் வாஷிங்டனைச் சேர்ந்த 'சொனாரா லுாயிஸ் ஸ்மார்ட் டாட்' என்ற இளம் பெண் தான், முதன்முதலில் தந்தையர் தினம் கொண்டாடும் யோசனையை முன்வைத்தார். அன்னையர் தினம் கொண்டாடும் போது, தந்தையர் தினம் ஏன் கொண்டாடக்கூடாது என வலியுறுத்தினார். இவரது தாய், தனது 6வது பிரசவத்தின் போது மரணமடைந்தார். தாயின் மறைவுக்கு பிறகு தந்தை வில்லியம், ஆறு குழந்தைகள் கொண்ட குடும்பத்தை கடுமையான சிரமங்களுக்கிடையே பராமரிப்பதை கண்டார். இது தான் தந்தையர் தினம் கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தை அவருக்கு துாண்டியது.
இதன்படி 1910ல் அமெரிக்காவில் முதன்முதலில் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது. 1966ல் அங்கீகரிக்கப்பட்டது. 1972ல் அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சனால், அந்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது. சில நாடுகளில் வெவ்வேறு தினங்களில் கடைபிடிக்கப்பட்டாலும், இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

மூலக்கதை