தி.மு.க. ஆட்சி வெகு விரைவில் உதயமாகும் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

PARIS TAMIL  PARIS TAMIL
தி.மு.க. ஆட்சி வெகு விரைவில் உதயமாகும் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

தி.மு.க. தலைவர் கருணாநிதி யின் 95-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சென்னை அண்ணா நகரில் உள்ள எம்.ஜி.ஆர். காலனியில் நேற்று இரவு நடந்தது. இந்த கூட்டத்துக்கு அண்ணாநகர் பகுதி செயலாளர் ச.பரமசிவம் தலைமை தாங்கினார். எம்.கே.மோகன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. சிறப்புரையாற்றினார்.

சிறப்பு விருந்தினராக தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது.

கருணாநிதி பிறந்தநாள் விழாவை தி.மு.க. சார்பில் ஜூன் 3-ந் தேதி மட்டும் நாம் கொண்டாடவில்லை. 3-ந் தேதியோடு அவருடைய பிறந்தநாளை முடித்துக்கொள்வது கிடையாது. அடுத்த ஆண்டு ஜூன் 3-ந் தேதி வரும் வரையில் கொண்டாட கூடிய வகையிலே, அந்த உணர்வு, தெம்பு, உரிமை, திமிரு நம்மிடம் இருக்கிறது.

தமிழ்நாட்டில் மட்டும் கருணாநிதி பிறந்தநாளை நாம் கொண்டாடவில்லை. தமிழகத்தை தாண்டி இருக்கக்கூடிய பல்வேறு மாநிலங்களில், கடல் கடந்தும், எங்கு எல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ, அங்கு எல்லாம் கொண்டாடப்படுகிறது.

அதற்கு காரணம். தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய தமிழர்களுக்கு மட்டும் இல்லாமல், உலகம் எங்கும் பரவிக்கிடக்கிற தமிழர்களின் பாதுகாப்பு அரணாக விளங்கி கொண்டிருக்கும் ஒரே தலைவர் அவர் என்பதால் தான்.

கருணாநிதி இந்திய நாட்டிற்கு ஜனாதிபதியை உருவாக்கி தந்திருக்கிறார். பல பிரதமர்களை உருவாக்கி தந்திருக்கிறார். பல்வேறு மாநிலங்களின் பிரச்சினைகளை எல்லாம் மையமாக வைத்து, உரிமையோடு கேட்க கூடிய மாநில சுயாட்சி என்ற பிரகடனத்தை ஏற்படுத்தி தந்தவர் கருணாநிதி.

உடல் நலிவுற்ற நிலையில் அவர் இப்போது ஓய்வு எடுக்கிறார். நாங்கள் அவரை சென்று பார்க்கும்போது, அவரது காதுக்கு அருகில் சென்று பேசுவோம். அப்போது முக மலர்ச்சியை வெளிப்படுத்துவார்.

அண்ணா அறிவாலயத்துக்கு போகலாமா? என்று கேட்டால் அற்புதமாக ஒரு சிரிப்பு சிரிப்பார். அவருக்கு பேச்சு பயிற்சி நடைபெறும்போது, மிகவும் சிரமப்பட்டு ‘அண்ணா... அண்ணா...’ என்று சொல்வார். ஒரு பேனாவை கையில் கொடுத்தால், அண்ணா என்று எழுதுவார். அண்ணாவையே நாள் முழுவதும், வினாடி தோறும் நினைத்துக்கொண்டு இருக்கும் தலைவர் கருணாநிதி தான்.

சில கட்சி தலைவர்கள் இன்றைக்கு, கருணாநிதி இருந்தால் விட்டிருப்பாரா?, என்கிறார்கள். முன்பு விமர்சித்தவர்கள், இன்றைக்கு கரிசனம் காட்டுகிறார்கள். அதற்கு நன்றி. நாங்கள் கருணாநிதியுடன் வாழ்கிறவர்கள். பயின்றுகொண்டு இருப்பவர்கள்.

அவர் எப்போது எதை செய்வார் என்று யாருக்கும் தெரியாது. அதை கொஞ்சம் நாங்களும் கற்று உள்ளோம். எனவே செய்யலையே என்று வருத்தம் வேண்டாம். நேரம் வரும். உரிய தந்திரத்தை எங்களுக்கு கருணாநிதி கற்றுத்தந்து இருக்கிறார். உரிய நேரத்தில் அதை பயன்படுத்துவோம்.

இன்றைக்கு ஆட்சியில் இல்லை. ஆனால் தி.மு.க. ஆட்சியில் செய்த நலத்திட்டங்கள் போல இனி செய்யப்படுமா? எவன் பிறந்து வந்தாலும் கருணாநிதி திட்டங்களை செயல்படுத்த முடியாது. ஆட்சிக்கு வரும் வாய்ப்பை நாம் இழந்தபோது 1.1 சதவீதம் மட்டுமே, அ.தி.மு.க.வுக்கும், நமக்கும் இருந்த வித்தியாசம். ஆனாலும் எதிர்க்கட்சியாக ஒவ்வொரு மக்கள் பிரச்சினைக்கும் பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்தோம். தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம்.,

ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வேண்டும் என்று மக்கள் ஒன்று சேர்ந்து, அரசியல் சாயலின்றி, 100 நாட்கள் போராட்டம் நடத்தினர். 100-வது நாளில் ஒரு பேரணி நடந்தது. உரிய அனுமதி பெறப்பட்ட போராட்டம் அது. ஆனால் அப்போராட்டத்தில் மக்களை காக்கை, குருவிகளை சுட்டுத்தள்ளுவது போல, மாற்று உடையில் காவலர்கள் சுட்டு தள்ளியுள்ளனர். ‘சைலண்டு புல்லட்’ என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஒன்று. இதன்மூலம் மத்திய அரசுக்கு, மோடிக்கு தெரிந்து திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி என்று தெளிவாக தெரிகிறது.

இந்த விவகாரத்தில் ஒரு அனுதாபமாவது மோடி தெரிவித்தாரா? குஜராத்தில் நடந்தால் சும்மா விட்டிருப்பாரா? வடமாநிலங்களில் இந்த விபரீதம் நடந்திருந்தால் பேசாமல் இருந்திருப்பாரா? அவருக்கு என் பகிரங்க கண்டனத்தை தெரிவிக்கிறேன்.

இன்றைக்கு தமிழகத்தில் நடப்பது ஆட்சி அல்ல, காட்சி. ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருக்கவேண்டும் என்று மக்கள் வாக்களித்தனர். ஜெயலலிதா இப்போது இல்லை. இறந்தவரை பற்றி விமர்சிக்க எனக்கு மனதில்லை. கருணாநிதி அப்படி எங்களை உருவாக்கவில்லை. ஆனாலும் சொல்கிறேன், ஜெயலலிதா இன்றைக்கு உயிரோடு இருந்திருந்தால் கூட பெங்களூரு சிறைச்சாலையில் சசிகலாவுடன் இருந்திருப்பார், ஆட்சியில் இருந்திருக்க மாட்டார். இறந்த காரணத்தினால் அவர் சிறையில் இல்லை, சமாதியில் இருக்கிறார். ஆனால் இப்போது உள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இப்போது மத்திய அரசுக்கு எடுபிடி பழனிசாமியாக இருக்கிறார். இந்த ஆட்சியில் எத்தனை கொடுமைகள் நடக்கிறது.

இனி தூத்துக்குடி என்று சொல்லக்கூடாது, சாத்துக்குடி என்று தான் சொல்லவேண்டும். தூத்துக்குடி எம்.எல்.ஏ. என்று கூட சொல்லக்கூடாது. ஏனென்றால் அங்கு நடந்த படுகொலையை பற்றி பேசக் கூட எங்களுக்கு சட்டசபையில் அனுமதிக்க மறுக்கிறார்கள்.

சட்டசபை ஒரு மாதிரியாக, வித்தியாசமாக நடக்கிறது. எனவே தான் ஒரு மாதிரி சட்டசபையை நாங்கள் நடத்தினோம். பெரும்பான்மை இல்லாதபோதும் திட்டங்கள் போடப்படுகிறது, சட்டங்கள் இயற்றப்படுகிறது. இது ஜனநாயக விரோதம்.

சமீபத்தில் பூவா? தலையா? என்று தமிழகமே நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருந்தது. ஆனால் இரண்டுமே இல்லாமல் நட்டுக்குத்தாக நிற்கிறது, தீர்ப்பு. இது நியாயமா... இது என் கேள்வி அல்ல, மக்களின் கேள்வி. தற்போது வந்துள்ள தீர்ப்பால் ஆட்சிக்கு ஆபத்து இல்லை. ஆனால் மக்களுக்கு ஆபத்து. சட்டமன்றத்தில் ஜனநாயகம் இல்லை. நீதிமன்றத்தின் நிலையோ, இப்படிப்பட்ட நிலை. எனவே யாரை நம்புவது. இனி மக்களை தான் நம்ப வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். இன்றைக்கு கருணாநிதியின் 95-வது பிறந்தநாளை கொண்டாடுகிறோம். 100-வது பிறந்தநாளையும் கொண்டாடுவோம் என்ற உறுதியுடன் சொல்கிறேன். அதே நேரத்தில் தமிழ்நாட்டில் மிக விரைவிலேயே தி.மு.க. வின் ஆட்சி உதயம் ஆக போகிறது. தயாராக இருங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

விழா மேடை பூம்புகார் போன்று அமைக்கப்பட்டிருந்தது. கருணாநிதியின் அரிய புகைப்படங்கள் அடங்கிய கண்காட்சியும் இடம் பெற்றிருந்தது.

மூலக்கதை