காலா படத்துக்கு சமூக வலைதளங்களில் பெருகும் ஆதரவு
பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே நேற்று வெளியான காலா திரைப்படத்துக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு பெருகுகிறது.
ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் நேற்று வெளியான படம் காலா. இந்த படத்தை ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷ் தயாரித்துள்ளார்.
ரஜினியின் அரசியல் வருகைக்கு பின் வெளியாகும் படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்பு நிலவியது.
சமீபத்தில் தூத்துக்குடி சென்றிருந்த ரஜினி பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், படத்தில் அதிகமான போராட்டக் காட்சிகள் இருப்பதாக செய்தி வந்தது பரபரப்பை கூட்டியது.
படத்தில் ரஜினி அடித்தட்டு மக்களின் நில உரிமைக்காக போராடும் தாதாவாக நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படாத நில அரசியலை மையமாக வைத்து கதை அமைந்துள்ளது. ரஞ்சித் பேசிய அரசியல் நடப்பு காலத்துக்கான அரசியல் என்று சமூகவலைதளங்களில் ஆதரவு பெருகி வருகிறது.
தமிழ் சினிமாவில் அதிகம் பார்க்க முடியாத அம்பேத்கர் சிலை, புத்தர் மண்டபம் என்று ஒடுக்கப்பட்டோருக்கான குறியீடுகளை பல இடங்களில் வைத்துள்ளார். சமூகத்துக்கு தேவையான அடித்தட்டு மக்களின் நில உரிமையை ரஜினியை வைத்து பேசி இருக்கிறார்.
எனவே எங்களுக்கு பிடித்து இருக்கிறது என்று சமூக வலைதளங்களில் ஏராளமானவர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
காலா படம் நேற்று ஒரே நாளில் தமிழ்நாடு முழுக்க 10 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக வினியோகஸ்தர்கள் கூறுகின்றனர். வழக்கமான ரஜினி படங்களை காட்டிலும் இது குறைவு தான்.
எனினும், வார இறுதியில் வசூல் அதிகரிக்கும் என்று கூறுகிறார்கள்.