அதிர்ச்சி கொடுத்த ஆப்கானிஸ்தான் அணி!
வங்காளதேசம்- ஆப்கானிஸ்தான் இடையே மூன்று 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரகாண்ட் தலைநகர் டேராடூனில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நடந்த முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரண்டாவது டி20 போட்டி நேற்று டேராடூனில் நடைபெற்றது. டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அந்த அணியின் தமிம் இக்பால் 43 ரன்னிலும், முஷ்பிகுர் ரகுமான் 23 ரன்னிலும், அபு ரைடர் ரோனி 21 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் விரைவில் அவுட்டாகினர்.
இதனால் வங்காளதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது.
ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான் 4 விக்கெட்களும், மொகமது நபி 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.
இதையடுத்து, 135 ரன்களை இலக்காக கொண்டு ஆப்கானிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஆடிய மொகமது ஷசாத் 24 ரன்களும், உஸ்மான் கனி 21 ரன்களும் எடுத்து அவுட்டாகினர்.
அடுத்து இறங்கிய சாமுல்லா ஷென்வாரி அதிரடியாக ஆடி 3 சிக்சர், 2 பவுண்டரியுடன் 49 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 18.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மொகமது நபி 15 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதைத்தொடர்ந்து, வங்காள தேசத்துடனான டி-20 தொடரை ஆபகானிஸ்தான் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி, முன்னிலை வகிக்கிறது.