ஜூன் 10ம் தேதி முதல் தலைமை செயலகத்தில் காத்திருப்பு போராட்டம் அய்யாக்கண்ணு அறிவிப்பு
கடலூர்: கோரிக்கைகளை நிறைவேற்றப்படும் வரை ஜூன் 10ம் தேதி முதல் சென்னை தலைமை செயலகத்தில் காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாக கடலூரில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்தார். விவசாய கடன்களை தள்ளுபடி, நஞ்சில்லா உணவு, மரபணு மாற்றப்பட்ட விதைகளை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மார்ச் 1ம்தேதி முதல் கன்னியாகுமரி முதல் கோட்டை வரை விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டுள்ள அய்யாக்கண்ணு நேற்று 29வது மாவட்டமாக கடலூருக்கு வந்தார்.
கடலூரில் அவர் மாவட்ட கலெக்டர் தண்டபாணியை நேரில் சந்தித்து மனு அளித்தார்.
முன்னதாக அவர் அளித்த பேட்டி: விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் எங்களிடம் உறுதி அளித்திருந்தார்.
அவரை வருகிற ஜூன் 10ம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து எங்களின் நியாயமான கோரிக்கை மனு அளிக்க இருக்கிறோம்.
அவற்றை நிறைவேற்றும் வரை நாங்கள் தலைமை செயலகத்தில் காத்திருப்பு போராட்டத்தை நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.