திருவொற்றியூரில் பட்டாக்கத்தியுடன் 2 ரவுடிகள் கைது

தமிழ் முரசு  தமிழ் முரசு
திருவொற்றியூரில் பட்டாக்கத்தியுடன் 2 ரவுடிகள் கைது

திருவொற்றியூர்: சென்னை திருவொற்றியூர் பேருந்து நிலையம் அருகே இன்று அதிகாலை 4. 30 மணியளவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிதம்பரமுருகேசன் மற்றும் போலீசார் வாகன ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு சந்தேக நிலையில் நின்றிருந்த 2 பேர் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தனர்.

அவர்களை போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். அவர்களிடம் சோதனை செய்ததில், அவர்களது முதுகில் 2 பட்டாக்கத்திகள் இருப்பதை கண்டுபிடித்தனர். பின்னர் அவர்களை திருவொற்றியூர் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர்.

விசாரணையில், அவர்கள் இருவரும் எண்ணூர், பர்மா நகரை சேர்ந்த மோகன் (எ) குட்டையா மோகன் (35), பாலு (36) ஆகியோர் என்பதும், இவர்கள் இருவரும் பிரபல ரவுடிகள் எனத் தெரியவந்தது.

மேலும் இவர்கள்மீது திருவொற்றியூர், எண்ணூர், சாத்தாங்காடு ஆகிய காவல் நிலையங்களில் கொலைமுயற்சி, அடிதடி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன எனத் தெரியவந்தது.
இதுகுறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 பட்டாக்கத்திகளையும் பறிமுதல் செய்தனர்.

முன்னதாக, இதேபோல் நேற்று மாலை பிரகாஷ் என்ற பிரபல ரவுடியை பட்டாக்கத்தியுடன் போலீசார் பிடித்துள்ளனர்.

தற்போது பிடிபட்ட இவர்கள் 2 பேரும் எதற்காக பட்டாக்கத்தியுடன் சுற்றி திரிந்துள்ளனர் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

.

மூலக்கதை