திவால் சட்ட திருத்தத்திற்கு, ‘பிக்கி’ வரவேற்பு; வாராக் கடன் வழக்குகள் விரைவாக பைசலாகும்
புதுடில்லி : மத்திய அரசு, திவால் சட்ட திருத்தத்திற்கு அளித்துள்ள ஒப்புதலை, இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பான, ‘பிக்கி’ வரவேற்றுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, நலிந்த நிறுவனங்களை, திவால் நிலையில் இருந்து மீட்கவும், அவ்வாறு முடியாத பட்சத்தில், திவால் நடைமுறையை விரைந்து முடிக்கவும் உதவக் கூடிய திவால் சட்டத்தை, 2016, டிசம்பரில் அறிமுகப்படுத்தியது. இதையடுத்து, 2017ல், ரிசர்வ் வங்கி பரிந்துரைப்படி, வாராக் கடன் தொடர்பாக, 12 நிறுவனங்கள் மீது, திவால் நடவடிக்கைக்கு விண்ணப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், கட்டுமான நிறுவனங்களிடம் இருந்து வீடு வாங்குவோர் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு விதிமுறைகளில் சலுகைகளை வழங்கவும், திவால் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என, தொழில் கூட்டமைப்புகள் கோரிக்கை விடுத்தன.
இதை ஏற்று, மத்திய நிறுவன விவகாரங்கள் துறை செயலர், இன்ஜெட்டி சீனிவாஸ் தலைமையில், 14 பேர் அடங்கிய திவால் சட்டக் குழுவை, மத்திய அரசு அமைத்தது. இக்குழு, பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டறிந்து, திவால் சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் அடங்கிய பரிந்துரையை, மார்ச் 23ல், மத்திய அரசிடம் வழங்கியது.
இந்த பரிந்துரைகளை ஏற்ற மத்திய அமைச்சரவைக் குழு, நேற்று முன்தினம், திவால் சட்டத்தில் திருத்தங்கள் செய்து, அவசர சட்டம் பிறப்பிக்க ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து, ஜனாதிபதியின் ஒப்புதலுடன், திவால் சட்ட திருத்தத்திற்கான அவசர சட்டம் அமலுக்கு வர உள்ளது.
இது குறித்து, பிக்கி தலைவர், ராஷேஷ் ஷா கூறியதாவது: திவால் சட்ட திருத்தத்திற்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. இதனால், வாராக் கடன் தொடர்பாக உள்ள ஏராளமான வழக்குகள் விரைந்து பைசலாகும். திவால் நடவடிக்கைக்கு உள்ளாகும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை நிறுவியவர்களும், ஏலத்தில் பங்கேற்க, சட்ட திருத்தம் வகை செய்கிறது. இதன் மூலம் எண்ணற்ற குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் வாராக் கடன் பிரச்னைகள் விரைவில் முடிவிற்கு வரும்.
வங்கிகளின் இடர்ப்பாட்டு கடன்களை குறைக்க, மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பாடுபட்டு வருகின்றன. வசதி இருந்தும் கடனை திரும்பச் செலுத்தாமல் உள்ளோர், தங்கள் நிறுவனங்கள் ஏலத்திற்கு வரும்போது, அதில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், ஏமாற்றும் நோக்கமின்றி, உண்மையாகவே தொழில் நசிவு காரணமாக, கடனை திரும்பச் செலுத்தாமல் உள்ள குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனர்கள், ஏலத்தில் பங்கேற்க, சட்ட திருத்தம் வாய்ப்பளிக்கிறது.
அத்துடன், கடன் வழங்கும் வங்கிகளுக்கு நிகரான அந்தஸ்தை, வீடு வாங்குவோருக்கும் வழங்கியுள்ளது. அதனால், ஒப்பந்த விதிகளுக்கு மாறாக செயல்படும் கட்டுமான நிறுவனங்களால் ஏற்படும் பாதிப்பிற்கு, வீடு வாங்குவோர் நிவாரணம் பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.
திவால் சட்டம், எந்த நோக்கத்திற்காக கொண்டு வரப்பட்டதோ, அதை நோக்கி செயல்படத் துவங்கி விட்டது. சமீபத்தில், ‘டாடா ஸ்டீல்’ நிறுவனம், ‘பூஷண் ஸ்டீல்’ நிறுவனத்தை அதிக மதிப்பில் கையகப்படுத்தியதை இதற்கு உதாரணமாக கூறலாம்.
-ராஷேஷ் ஷா, தலைவர், ‘பிக்கி’