முந்தி செல்லும் போது விபரீதம் லாரி சக்கரத்தில் பைக் சிக்கி மெக்கானிக் பலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
முந்தி செல்லும் போது விபரீதம் லாரி சக்கரத்தில் பைக் சிக்கி மெக்கானிக் பலி

சென்னை: நந்தனம் அருகே முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்ற போது எதிர்பாராத விதமாக பைக் லாரி சக்கத்தில் சிக்கி மெக்கானிக் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் வந்த நண்பர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சென்னை சிஐடி நகரை சேர்ந்தவர் அசோக்(19).

இவர் அதேபகுதியில் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். நேற்று இரவு 10. 30 மணிக்கு பணி முடிந்து நண்பருடன் வீட்டிற்கு அசோக் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

நந்தனம் சிக்னல் அருகே செல்லும் போது முன்னால் சென்ற டிப்பர் லாரியை முந்தி செல்ல முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக பைக் நிலைத்தடுமாறி அசோக் மற்றும் அவரது நண்பர் கீழே விழுந்தனர்.

இதில் லாரின் முன் சக்கரத்தில் அசோக் பைக்குடன் சிக்கி கொண்டார். இதில் சம்பவ இடத்திலேயே அசோக் உடல் நசுங்கி உயிரிழந்தார்.

உடன் வந்த நண்பர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அசோக் உடலை மீட்டனர். உயிருக்கு போராடி கொண்டிருந்த மற்றொருவரை மீட்டு சிகிச்சைக்கா ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அசோக் உயிரிழந்த செய்தியை அறிந்த அவரது உறவினர்கள் திடீரென விபத்து நடந்த பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு லாரி கண்ணாடிகளை அடித்து உடைத்தனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அதைதொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். அதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

பின்னர் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

.

மூலக்கதை