பா.ஜ., எம்.எல்.ஏ.,க்களிடம் பணம் கேட்டு கொலை மிரட்டல்

தினமலர்  தினமலர்
பா.ஜ., எம்.எல்.ஏ.,க்களிடம் பணம் கேட்டு கொலை மிரட்டல்

லக்னோ: உ.பி.,யில், பா.ஜ.,வை சேர்ந்த, ஆறு, எம்.எல்.ஏ.,க்கள், 10 லட்சம் ரூபாய் கேட்டு தங்களுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக, போலீசில் புகார் அளித்துள்ளனர்.

உத்தர பிரதேசத்தில், ஆளும் பா.ஜ.,வை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள், வீக் விக்ரம் சிங், பிரேம் நாராயண் பாண்டே, வினய் குமார் திவேதி, வினோத் கட்யார், சஷாங்க் திரிவேதி, அனிதா ராஜ்புத் ஆகியோர், போலீசில் தனித்தனியாக கொடுத்த புகார் மனு விவரம்:

சமீபகாலமாக, 'வாட்ஸ்ஆப்'பில், எங்களுக்கு மிரட்டல் செய்தி வந்தது. அதில், '10 லட்சம் ரூபாய் பணத்தை, என் வங்கி கணக்கில், மூன்று நாட்களில் செலுத்த வேண்டும்; இல்லாவிடில், உங்கள் குடும்பத்தினரை கொன்றுவிடுவோம்' என கூறப்பட்டிருந்தது. இந்த செய்தி, பல முறை, வாட்ஸ் ஆப்பில், வந்துள்ளது. கொலை மிரட்டல் விடுத்தவரை கைது செய்து, விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.

இது பற்றி போலீசார் கூறியதாவது: எம்.எல்.ஏ.,க்கள் ஆறு பேருக்கும் வாட்ஸ் ஆப்பில் கொலை மிரட்டல் விடுத்தவன், ஒருவனே. கொலை மிரட்டல் விடுத்தவன் பெயர், அலி புதேஷ் பாய், துபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது; இது பற்றி தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முதல் கட்ட விசாரணையில், இது, விஷமி ஒருவனின் செயல் எனத் தெரிய வந்துள்ளது. இவ்வாறு போலீசார் கூறினர்.

மூலக்கதை