ரியல் எஸ்டேட்டில் அதிகரித்த தனியார் பங்கு முதலீடு
புதுடில்லி : ரியல் எஸ்டேட் துறையில், சில்லரை விற்பனை பிரிவில், மூன்று ஆண்டுகளில், தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்களின் முதலீடு, 5,500 கோடி ரூபாய் என்ற அளவை எட்டியுள்ளது.
இது குறித்து, ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான, ஜே.எல்.எல்., இந்தியா வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை: ரியல் எஸ்டேட் துறையில், சில்லரை விற்பனை பிரிவில், 2015 – 18 மார்ச் வரையிலான காலத்தில், தனியார் பங்கு முதலீடு, 5,500 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
குறிப்பாக, வணிக வளாகங்களில், ஆர்வமுடன் முதலீடு செய்யப்படுகிறது. அதனால், பல கட்டுமான நிறுவனங்கள், வணிக வளாக திட்டங்களில் ஆர்வம் காட்டுவது அதிகரித்துள்ளது. இவ்வகை வளாகங்களுக்கு, மக்கள் அதிகம் கூடும் இடங்கள் தேர்வு செய்யப்படுகின்றன. அத்துடன், கவர்ச்சிகரமான வளாக வடிவமைப்பு, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றன.
இத்தகைய அம்சங்களில் பின்தங்கியுள்ள வணிக வளாகங்களில், பல கடைகள் காலியாக உள்ளன. அத்தகைய இடங்களில், சிறிய அலுவலகங்கள், மருத்துவமனைகள், கல்வி மையங்கள், ஆரோக்கிய பராமரிப்பு கூடங்கள் ஆகியவை அமைக்கப்படுகின்றன. மேம்பட்ட தரத்திலான வணிக வளாகங்களில், சராசரியாக, 8 சதவீத அளவிற்கே, கடைகள் விற்பனையாகாமல் உள்ளன.
வசதி குறைவான, மோசமான பராமரிப்பில் உள்ள வணிக வளாகங்களில், காலியிடங்கள், 40 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளன. எதிர்காலத்தில், இது போன்ற வளாகங்கள், ‘பிராண்டு’ நிறுவனங்களின் ஆதரவை இழக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சில்லரை விற்பனையில்..
சமீபகாலத்தில் இல்லாத வகையில், ரியல் எஸ்டேட் சில்லரை விற்பனை பிரிவில், இந்தாண்டு, ஜனவரி – மார்ச் காலாண்டில், 1,000 கோடி ரூபாய் தனியார் பங்கு முதலீடு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதில், பெங்களூரில், ‘எல் அண்ட் டி’ நிறுவனத்தின் நிலம், 650 கோடி ரூபாய்க்கு, போனிக்ஸ், சி.பி.பி.ஐ.பி., நிறுவனங்களுக்கு கைமாறியதும் அடங்கும். இது தவிர, நிதேஷின், புனே வணிக வளாகத்தில், 300 கோடி ரூபாய் முதலீட்டில், 85 சதவீத பங்குகள் வாங்கப்பட்டுள்ளன.