ஆட்டோமேஷன்’ இரு மடங்கு உயரும்; பணியிடங்களில் ரோபோ பயன்பாடு பெருகும்
புதுடில்லி : பணியிடங்களில் ‘ஆட்டோமேஷன்’ தொழில்நுட்ப பயன்பாடு, அடுத்த மூன்று ஆண்டுகளில், இரு மடங்கு உயரும் என, ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த, வில்லிஸ் டவர்ஸ் வாட்சன் நிறுவனம், நிதி ஆலோசனை, காப்பீட்டு தரகு சேவை ஆகியவற்றை வழங்கி வருகிறது. இந்நிறுவனம், ‘ஆட்டோமேஷன்’ எனப்படும் பணியாளர் தயவின்றி, ஒரு செயலை, தன்னிச்சையாக செய்து முடிக்கும் தொழில்நுட்பங்களின் பயன்பாடு குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
மாற்றம்:
அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்திய நிறுவனங்களில், அடுத்த மூன்று ஆண்டுகளில், ரோபோ, செயற்கை நுண்ணறிவு சாப்ட்வேர் போன்றவை சார்ந்த, ‘ஆட்டோமேஷன்’ பயன்பாடு, இரு மடங்கு அதிகரிக்கும். ஆனால், ஒரு சில நிறுவனங்கள் தான், அமைப்பு ரீதியில் நடைபெறப் போகும் இந்த மாற்றத்தை சந்திக்க தயாராக உள்ளன.
தற்போது, 14 சதவீத பணியிடங்களில் தான், ஆட்டோமேஷன் பயன்பாடு உள்ளது. இது, அடுத்த மூன்று ஆண்டுகளில், 27 சதவீதமாக அதிகரிக்கும்.மனிதர்கள் செய்யும் பணியை, இயந்திரங்களும், சாப்ட்வேர்களும் செய்யும்பட்சத்தில், உற்பத்திச் செலவினம் குறையும் என்ற பொதுவான மதிப்பீடு உள்ளது. இதை, ஆய்வில் பங்கேற்ற, ஐம்பது சதவீத நிறுவனங்கள் மறுத்துள்ளன. ஆட்டோமேஷன், மனித செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும். புதிய பணிகளை உருவாக்கும் என, அவை தெரிவித்துள்ளன.
சவால்:
ஆட்டோமேஷன் காரணமாக மாறும் பணிச்சூழல், நிறுவனங்களுக்கு புதிய சவால்களை உருவாக்கும். அவை, பணியாளர்கள் தொடர்பான தேவைகளுக்கும், பின்பற்ற உள்ள தொழில்நுட்பங்களுக்கும் ஏற்ப, நிறுவனங்கள் தயாராக உள்ளனவா என்பதை சோதிக்க கூடியவையாக இருக்கும். இதன் மூலம், அமைப்பு ரீதியான கட்டமைப்பிற்கு நிறுவனங்கள் மாறும்.
சேவைகள் துறையில் தான், அதிகபட்ச ஆட்டோமேஷன் பயன்பாடு இருக்கும். இத்துறையில் தான் மிக அதிகமாக, குறிப்பிட்ட திறன் சார்ந்த பணிகள், அதிக அளவில் வெளியாரிடம் ஒப்படைத்து பெற்றுக் கொள்ளப்படுகின்றன. அதுபோல, பணியாளர் தயவின்றி, ரோபோ செயல்பாடுகள் மூலம், பணிகளை முடிப்பதிலும், சேவைகள் துறை தான், முதலிடத்தில் உள்ளது.
அடுத்த மூன்று ஆண்டுகளில், ஆட்டோமேஷன் பயன்பாடு காரணமாக, குறைந்த அளவிற்கே முழுநேர பணியாளர்கள் தேவைப்படுவர் என, 55 சதவீத நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அதுபோல, குழு தலைவர்கள், மேலாளர்கள் உட்பட, ஊழியர்களின் பணித் திறனில் ஏற்படக் கூடிய மாற்றங்களை, 54 சதவீத நிறுவனங்கள் உணர்ந்துள்ளன. ஆனால், அத்தகைய மாற்றத்தை எதிர்கொள்ள, 24 சதவீத நிறுவனங்கள் மட்டுமே தயாராக உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பொருட்களின் தரம் மற்றும் உற்பத்தி மேம்பட, ஆட்டோமேஷன் பயன்பாடு அவசியம் என்பதை, தயாரிப்பு துறையைச் சேர்ந்த, 54 சதவீத நிறுவனங்கள் உணர்ந்துள்ளன. ஆனால், அதற்கேற்ப திட்டமிட்டு, பணியிடத்தில், ஆட்டோமேஷன் பயன்பாட்டை புகுத்துவதில், மூன்றில் ஒரு நிறுவனம் மட்டுமே தயாராக உள்ளது
-வில்லிஸ் டவர்ஸ், வாட்சன் ஆய்வறிக்கை