தனியார் இ- – சேவை மையங்கள் எப்போது செயல்பாட்டுக்கு வரும்?
சென்னை : ‘அரசு துறைகளின், ‘ஆன்லைன்’ சேவைகளை, தனியார் பிரவுசிங் மையங்களில் வழங்கும் நடைமுறை, விரைவில் செயல்பாட்டுக்கு வர வேண்டும்’ என, தொழில்முனைவோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு துறைகளின் சேவைகளை, பொதுச் சேவை மையம் வாயிலாக, பொதுமக்கள் எளிதில் பெறும் வகையில், தமிழகத்தில், ‘கேபிள் டிவி கார்ப்பரேஷன்’ மூலம் -பொது இ – சேவை மையங்கள் துவக்கப்பட்டன. ஊழியர் பற்றாக்குறை, போதிய உபகரணம் இல்லாமை போன்ற பல காரணங்களால், இதன் செயல்பாடு குறைந்தது. இதனால், தனியார் பிரவுசிங் சென்டர்களையும், இ- – சேவை மையமாக மாற்ற, அரசு முடிவு எடுத்தது.
இத்தகைய சேவை மையங்கள் மூலம், பிறப்பு, இறப்பு சான்றிதழ், ஜாதி சான்றிதழ், மகளிர் திட்டங்கள், விதவை திட்டங்கள், மின் சேவைகள் உள்ளிட்டவற்றை எளிதாகவும், விரைவாகவும் பெற்றுக் கொள்ளலாம். இதற்காக, 10 ஆயிரம் ரூபாய் முன்வைப்பு தொகையுடன், தனியார் பிரவுசிங் சென்டர் உரிமையாளர்கள், போதிய ஆவணங்களுடன் விண்ணப்பித்திருந்தனர். கடந்த பிப்ரவரி மாதம் வரை, ஒப்பந்தங்கள் பெறப்பட்டன. இது தொடர்பாக ஆய்வு பணிகள் முடிந்த நிலையில், இன்னும் அடையாள குறியீடு எண்கள் வழங்கப்படாமல் உள்ளன.
இது குறித்து, தொழில்முனைவோர் ராஜகணபதி கூறியதாவது: ஆய்வுப் பணிகள் முற்றிலும் முடிந்து, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு வரிசையாக அனுமதி வழங்கப்படும் என, அதிகாரிகள் கூறிஉள்ளனர். தற்போது பள்ளிகள் திறக்கப்படும் சூழ்நிலையில், ஜாதி சான்று, இருப்பிட சான்று, வருமான சான்று போன்ற பல காரணங்களுக்காக மக்கள், ஆன்லைன் சேவை மையங்களை நாடத் துவங்கியுள்ளனர். மே இறுதி அல்லது ஜூனில், தனியார் பிரவுசிங் மையங்களில், அரசு இ – சேவை மையங்கள் செயல்பாட்டுக்கு வந்தால், மக்களுக்கு உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.