தற்கொலையை தடுக்க அதிவேகமாக சென்றவர் - காவல்துறையினரால் கைது!!
நேற்று திங்கட்கிழமை, மகிழுந்து ஒன்றில் அதிவேகமாக சென்றுகொண்டிருந்த நபர் ஒருவரை காவல்துறையினர் மறித்தனர். குறித்த நபரின் தோழி ஒருவரின் தற்கொலை முயற்சியை தடுக்க அவர் வேகமாக சென்றதாக தெரிவித்தார்.
Callac (Côtes d'Armor) நகரில் இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. பிற்பகல் 1 மணி அளவில், மகிழுந்தில் குறித்த நபர் அதி உச்ச வேகத்தில் சென்றுகொண்டிருக்கும் போது, அப்பகுதி காவல்துறையினரால் மறிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார். தனது தோழி தற்கொலை செய்துகொள்ளப்போவதாகவும், அவரை நான் காப்பாற்றவே வேகமாக சென்றுகொண்டிருந்தேன் எனவும் அவர் காவல்துறையினருக்கு விளக்கம் அளித்தார். உடனடியாக Callac நகரில் உள்ள அவரது தோழி வீட்டுக்கு காவல்துறையினர் சென்றுள்ளனர்.
அங்கு அப்பெண் தற்கொலை செய்யும் நோக்கில், கழுத்தில் கயிறு சுற்றப்பட்ட நிலையில் இருக்கும் போது, காவல்துறையினர் கதவினை உடைத்துச் சென்று காப்பாற்றினர். பின்னர் அப்பெண்ணும் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக காவல்நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டார். சினிமா போல், இறுதி நிமிடத்தில் காவல்துறையினர் அப்பெண்ணை காப்பாற்றியது அப்பகுதியில் பெரும் பரபரப்பாகியுள்ளது.