சாத்துக்குடி வரத்து அதிகரிப்பு
சென்னை : கோயம்பேடு சந்தையில் முதல் ரக சாத்துக்குடி வரத்து அதிகரித்துள்ளது.
கோயம்பேடு காய்கனி சந்தையில், சாத்துக்குடி, மாம்பழ வரத்து அதிகரித்துள்ளது. வெயில் காரணமாக பழங்களின் தேவை அதிகரித்துள்ளது. இதில் சாத்துக்குடி, மாம்பழம் உள்ளிட்டவற்றின் வரத்து அதிகரிப்பு காரணமாக, விலை குறையத் துவங்கியுள்ளது. ஆந்திரா, ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கோயம்பேடு சந்தைக்கு சாத்துக்குடி வரத்து அதிகரித்துள்ளது. நேற்று, 15 லாரிகளின் சாத்துக்குடி இறக்குமதியானது.
இது குறித்து பழ கமிஷன் சங்க தலைவர் சீனிவாசன் கூறியதாவது: இந்தாண்டு சாத்துக்குடி கொள்முதல் விலை, கடந்தாண்டை விட, ஒரு மடங்கு அதிகரித்துள்ளது. அனந்தபூரில் இருந்து முதல் ரக சாத்துக்குடி அதிகளவு வந்துள்ளது. மொத்த விலையில், ஒரு கிலோவுக்கு, 60 – 85 ரூபாய் வரையிலும், சில்லரை விலையில், 100 – 110 ரூபாய் வரையும் உள்ளது. இரண்டாம் ரக சாத்துக்குடி, 70 – 85 வரையிலும்; மூன்றாம் ரக சாத்துக்குடி, 50 – 65 வரையிலும் உள்ளது.
அதே போல் ஆந்திராவில் இருந்து பங்கனப்பள்ளி, ஹிமாம்பசந்த் மாம்பழ வரத்தும் அதிகரித்துள்ளது. மொத்த விலையில் பங்கனப்பள்ளி, 1 கிலோ, 25 – 40 ரூபாய்க்கு கிடைக்கிறது. ஜூன் இறுதி அல்லது ஜூலை மாத துவக்கத்தில், ருமானி வரத்து இருக்கும். சீசன் பழமான பலாப்பழம் ஒன்று சைசுக்கு ஏற்ப, 300 – 1,000 ரூபாய் வரை விற்பனையாகிறது. இவ்வாறு அவர் கூறினார்.