யூரோப்பியன் கோல்டன் ஷூவை 5வது முறையாக கைப்பற்றிய மெஸ்ஸி
ஸ்பெயின் : 2018-ம் ஆண்டுக்கான சிறந்த கால்பந்து வீரருக்கான யூரோப்பியன் ‘கோல்டன் ஷூ’ எனப்படும் தங்கக் காலணி விருதை கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி வென்றார்.
ஐரோப்பா கண்டத்தில் உள்ள ஒவ்வொரூ நாட்டிலும் ஆண்டிற்கு ஒரு முறை கால்பந்து போட்டி நடைபெறும். இந்த போட்டியினை இங்கிலாந்து இங்கிலீஷ் பிரிமியர் லீக், ஸ்பெயினில் லாலிகா லீக், இத்தாலியில் செரி ஏ, ஜெர்மனியில் பன்டேஸ்லிகா என்று அழைக்கப்படும்.
இந்தத் தொடர்களில் ஆண்டுதோறும் அதிக கோல்கள் அடிப்பவர்களுக்கு உயரிய விருதாக கோல்டன் ஷூ வினை வழங்கி கவுரவிப்பது வழக்கம்.
உலகின் தலைசிறந்த நட்சத்திர கால்பந்து வீரர்களில் ஒருவராக அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி திகழ்ந்து வருகிறார். மேலும் இந்த விருதை 5வது முறையாக வென்று சாதனைப் படைத்துள்ளார்.
முன்னதாக, 2010, 2012, 2013 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் இவ்விருதை வென்றுள்ளார். இதன்மூலம் போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 4 முறை வாங்கிய முந்தைய சாதனையை முறியடித்துள்ளார்.
பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வரும் லயோனல் மெஸ்ஸி, இந்த 2017-2018 சீசனில் 34 கோல்களுடன் 68 தனிநபர் புள்ளிகளைப் பெற்று இச்சாதனையைப் படைத்துள்ளார். மேலும் சமீபத்தில் நடைபெற்ற லா லீகா கால்பந்து தொடரிலும் அதிக கோல்களை அடித்த வீரராகத் திகழ்கிறார்.
மெஸ்ஸி ரசிகர்கள் இந்த வெற்றியை திருவிழா போல கொண்டாடி வருகிறார்கள்.