14 ஆம் வட்டாரத்தில் சரமாரியான துப்பாக்கிச்சூடு! - அச்சத்தில் பொதுமக்கள்!!
முகமூடி அணிந்த சில நபர்கள் 14 ஆம் வட்டாரத்தில் உள்ள பொது இடத்தில் வைத்து சரமாரியாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளமை பெரும் பரபரப்பாகியுள்ளது.
மார்ச்செய்யின் 14 ஆம் வட்டாரத்தில், நேற்று திங்கட்கிழமை 17:00 மணி அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. முகமூடி அணிந்துகொண்டிருந்த இரு நபர்களில் ஒருவர் ரைபிள் வகை துப்பாக்கி ஒன்றையும், மற்றயவர் பிஸ்ட்டல் கைத்துப்பாக்கி ஒன்றையிம் கையில் வைத்துக்கொண்டு வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதுடன், நபர் ஒருவரையும் பிணையக்கைதியாக பிடித்து வைத்திருந்துள்ளார்.
துப்பாக்கிச்சத்தம் கேட்டு, உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க, சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் விரைந்து வந்துள்ளனர். பின்னர் காவல்துறையினரை நோக்கி அவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்த, காவல்துறையினரும் பதிலுக்கு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சரமாரியாக துப்பாக்கி முழக்கம் கேட்டது. ஆரம்பத்தில் இது பயங்கரவாத தாக்குதல் என பொதுமக்களிடையே தகவல் பரவிய நிலையில், இது பயங்கரவாத தாக்குதல் இல்லை என காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.
இந்த சம்பவத்தில் ஒருவர் மாத்திரமே காயமடைந்ததாகவும், காவல்துழ்ரையினர் காயமடையவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.