பி.எஸ்.என்.எல்.,லின் வருவாய் 81 சதவீதம் டேட்டாவால் கிடைக்கும்
‘வரும், 2022ம் ஆண்டில், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் மொத்த வருவாயில், 81 சதவீதம், மொபைல் டேட்டா மூலம் கிடைக்கும்’ என, அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள, 27 பி.எஸ்.என்.எல்., மண்டல அதிகாரிகள் கூட்டம் டில்லியில் நடந்தது. இந்தக் கூட்டத்தில், மத்திய தொலை தொடர்பு அமைச்சர் மனோஜ் சின்ஹா, செயலர் அருணா சுந்தர்ராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.
இது குறித்து, பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் கூறியதாவது: மண்டல அதிகாரிகளுடன் நடந்த கூட்டத்தில், பி.எஸ்.என்.எல்., வளர்ச்சி குறித்தும், அதன் தேவைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆண்டு, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் வளர்ச்சிக்கு தேவையான பல்வேறு சிறப்பு திட்டங்கள் குறித்து, உயர் அதிகாரிகள் பேசினர்.
சர்வதேச மொபைல் டேட்டா மற்றும் ‘வைபை’ திட்டங்களை ஊக்கப்படுத்த வேண்டும். வரும் காலங்களில், வீடு தோறும், ‘பிராட்பேண்டு’ சேவை கட்டாயம் இடம்பெறும். இதனால், 2022ம் ஆண்டில், பி.எஸ்.என்.எல்.,லின் மொத்த வருவாயில், 81 சதவீதம் மொபைல் டேட்டா மூலம் கிடைக்கும். தனியார் நிறுவனங்களுக்கு இணையாக போட்டியிடும் அளவுக்கு மார்கெட்டிங் துறையினர் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.