தமிழகத்தில் கூடுதலாக 7 இடங்களில் ‘இ – நாம்’ஆன்லைன் விற்பனை சந்தை
தமிழகத்தில், ‘இ – நாம்’ எனும், ஆன்லைன் வேளாண் விளைபொருட்கள் விற்பனை சந்தை மையத்தை, கூடுதலாக ஏழு இடங்களில் அமைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.விவசாயிகள், வேளாண் விளை பொருட்களை ஆன்லைன் மூலம் விற்க, தேசிய வேளாண் விற்பனை சந்தையை மத்திய அரசு துவங்கியது. www.enam.gov.in இணையதளம் மூலம், விவசாயிகள் தங்களின் விளை பொருட்களுக்கு தேவை எங்கு உள்ளது, எவ்வளவு தேவை உள்ளிட்ட தகவல்களை அறிந்து, ஆன்லைனிலேயே விற்பனை செய்யலாம்.அந்தந்த பொருட்களுக்கு விவசாயிகளே விலை நிர்ணயிக்கலாம். இடைதரகர்கள் தொல்லை இருக்காது.தேசிய அளவில், 585 வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள், ஆன்லைன் விற்பனை சந்தையோடு இணைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில், மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், கோவை, வேலுார் உட்பட, 23 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.மூன்று மாதத்தில், இந்த சந்தை மூலம், 20 கோடி ரூபாய்க்கும் மேல் வர்த்தகம் நடந்துள்ளது. விவசாயிகள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.எனவே, மாநிலங்களில் ஆன்லைன் விற்பனை சந்தையை அதிகப்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் கூடுதலாக ஏழு இடங்களில் ஆன்லைன் சந்தை அமைக்கப்பட உள்ளது. இதற்கான, இடத்தேர்வும் நடந்து வருகிறது.இம்முறையை மேலும் எளிமையாக்க, இ – நாம், ‘மொபைல் ஆப்’ தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளது.
– நமது நிருபர் –