மும்பையை தெறிக்கவிட்ட பட்லர் 5ம் இடத்திற்கு முன்னேறிய ராஜஸ்தான்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மும்பையை தெறிக்கவிட்ட பட்லர் 5ம் இடத்திற்கு முன்னேறிய ராஜஸ்தான்

மும்பை: மும்பையில்  ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ்  இடையே   நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 47வது  ஆட்டத்தில்  ஜோஸ் பட்லரின் அதிரடி ஆட்டத்தால் மும்பையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் 5வது  இடத்திற்கு முன்னேறியுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில்   டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி  பந்து வீச்சை தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய மும்பை அணிக்கு லீவிஸ் - சூரிய குமார் யாதவ் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. சூரிய குமார் யாதவ் 38 ரன்கள் எடுத்து அவுட் ஆக அடுத்து வந்த கேப்டன் ரோஹித் சர்மா வந்த வேகத்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார்.

எனினும் நன்றாக ஆடிய லீவிஸ் 60 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

எவின் லெவிஸ் 42 பந்தில் 60 ரன்னிலும், இஷான் கிஷான் 12 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

குருணால் பாண்டியா 3 ரன் எடுத்து அவுட்டானார். ஹர்திக் பாண்ட்யா 21 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 36 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.

ஹர்திக் பாண்டியா தவிர மற்றவர்கள் சொதப்பல் ஆட்டத்தினை தந்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது.

எளிதான  வெற்றி பெறலாம் என்கிற நம்பிக்கையோடு  களமிறங்கிய  ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில்  ஷார்ட் - பட்லர் ஜோடி துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.   ஷார்ட் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி தந்தாலும் பின்னர் இணைந்த ரஹானே - பட்லர் இணை பொறுப்பாக ஆடினர். ரஹானே 37 ரன்களுக்கு வெளியேறினார்.

இந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி வரும் பட்லர் அரைசதம் அடித்தார். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் சேவாக்கிற்கு அடுத்து தொடர்ச்சியாக 5 அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமையை பட்லர் பெற்றார்.

இறுதியாக 18 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து ராஜஸ்தான் அணி வெற்றி இலக்கை எட்டியது. பட்லர்  53 பந்துகளில்  5 சிக்சர், 9 பவுண்டரியுடன்  94 ரன்கள் எடுத்தார்.

இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

.

மூலக்கதை