சீன கேளிக்கை விடுதியில் நள்ளிரவில் தீ விபத்து: 18 பேர் பரிதாப பலி

தினகரன்  தினகரன்

பீஜிங்: சீனாவில் கேளிக்கை விடுதி ஒன்றில், நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 18 பேர் உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். சீனாவின் குயிங்யுவான் நகரில் கரோக் என்ற பெயரில் கேளிக்கை விடுதி இயங்கி வந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு 3 மாடி கட்டிடத்தில் இயங்கி வந்த கேளிக்கை விடுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென அடுத்தடுத்த அறைகளில் தீ பரவியதால் அனைவரும் அலறி கூச்சலிட்டனர். தகவல் அறிந்து விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் சிக்கி 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர். தீ விபத்து தொடர்பான முதல்கட்ட விசாரணையில் சதி வேலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

மூலக்கதை