இன்று வெயில் கொதிக்கும்; சூறைக்காற்று வீசும்: வானிலை மையம் எச்சரிக்கை

தினமலர்  தினமலர்
இன்று வெயில் கொதிக்கும்; சூறைக்காற்று வீசும்: வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை : 'தமிழகத்தில், இன்று(ஏப்.,25) எட்டு மாவட்டங்களில், வெயில் அளவு, இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருக்கும். 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில், சூறைக்காற்று வீசும்' என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் கோடை வெயில் உச்சகட்டத்தை நெருங்கியுள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளில், வெயிலின் அளவு, 38 டிகிரி செல்ஷியசுக்கு மேல், அதாவது, 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் சென்றுள்ளது. வெப்பநிலை அதிகரிப்பால், கடல் சீற்றம் அதிகமாக உள்ளது.

இந்நிலையில், இன்றைய வானிலை நிலவரம் குறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள, முன் எச்சரிக்கை: கரூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலுார், திருச்சி, சேலம், அரியலுார் ஆகிய எட்டு மாவட்டங்களில், வழக்கமான வெயிலை விட, 3 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருக்கும். வெப்பநிலையை பொறுத்தவரை, 41 டிகிரி செல்ஷியஸ் வரை பதிவாகும்.

மதுரை, சிவகங்கை, நீலகிரி, கோவை, விருதுநகர் உள்பட, 15க்கும் மேற்பட்ட உள் மாவட்டங்களில், சூறை காற்று வீசும். சில இடங்களில், இடியுடன் கூடிய வெப்ப சலனமழைக்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மூலக்கதை