மெரினாவில் போராட்டம் நடக்குமா? ஐகோர்ட் இன்று தீர்ப்பு

தினமலர்  தினமலர்
மெரினாவில் போராட்டம் நடக்குமா? ஐகோர்ட் இன்று தீர்ப்பு

சென்னை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, சென்னை, மெரினாவில், உண்ணாவிரதம் நடத்த, அனுமதி கோரிய வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம், இன்று(ஏப்.,25) தீர்ப்பு அளிக்கிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, மெரினா கடற்கரையில், 90 நாள்கள், உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரி, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத் தலைவர், அய்யாக்கண்ணு, சென்னை உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு, கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, 'மெரினாவில் போராட, யாருக்கும் அனுமதி இல்லை' என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடைசியாக, மெரினாவில் நடந்த போராட்டம் குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய, அரசுக்கு, நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை, நீதிபதி ராஜா முன், நேற்று மீண்டும் வந்தது. அப்போது, அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பு, இன்று அளிக்கப்படும் என, நீதிபதி தெரிவித்தார்.

மூலக்கதை