அரசியலில் இருந்து ஓய்வு பெற முடிவு : மவுனத்தை கலைத்தார் அம்பரீஷ்

தினகரன்  தினகரன்

பெங்களூரு : ‘‘உடல்நிலை ஒத்துழைக்காததால் அரசியலில் இருந்து முழுமையாக  ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன்’’ என்று மண்டியா தொகுதி எம்.எல்.ஏவும், நடிகருமான அம்பரீஷ்  தெரிவித்தார். இதுகுறித்து பெங்களூருவில் நடிகர் அம்பரீஷ் நிருபர்களிடம் கூறியதாவது: மாநில  சட்டபேரவைக்கு வரும் மே 12ம் தேதி நடக்கும் தேர்தலில் மண்டியா தொகுதியில்  மீண்டும் போட்டியிட காங்கிரஸ் தலைமை எனக்கு வாய்ப்பு வழங்கியது. வேட்புமனுத்  தாக்கல் செய்ய வசதியாக கட்சியின் சார்பில் பி பாரமும் வழங்கப்பட்டது.  தேர்தலில் போட்டியிடலாமா, வேண்டாமா? என்பது குறித்து பல கோணங்களில்  யோசித்தேன். கடந்தாண்டு எனது உடல் நலம் பாதிக்கப்பட்டு சிங்கப்பூரில்  சிகிச்சை எடுத்தேன். எனக்கு இன்னும் முழுமையாக குணமாகவில்லை. உடல்நிலை  ஒத்துழைக்காமல் இருப்பதால் அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வு பெற முடிவு  செய்துள்ளேன். அதனால் வரும் தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன். மேலும்  என்னால் சரியாக நடமாட முடியாமல் உள்ளதால் தேர்தல் பிரசாரத்திலும் பங்கேற்க  மாட்டேன். இது நான் தனிப்பட்ட முறையில் பலமுறை யோசித்து எடுத்த முடிவு. மண்டியா தொகுதியில் காங்கிரஸ் சார்பில்  யார் போட்டியிட்டாலும் அவருக்கு எனது ஆதரவு இருக்கும். நான் அரசியலில்  இருந்து ஓய்வு பெற்றாலும் மக்களின் உள்ளங்களில் நிலைத்திருப்பேன். வயது  முதிர்வின் காரணமாக அரசியலில் தொடர்ந்து ஈடுபட வேண்டாம் என்ற முடிவை  எடுத்துள்ளேன். இந்த முடிவை நான் எடுப்பதற்கு  காங்கிரஸ் தலைவர்கள் யாரும்  காரணம் கிடையாது. இவ்வாறு அம்பரீஷ் கூறினார்.

மூலக்கதை