உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் பதவி நீக்க நோட்டீஸ் நிராகரிப்பு ஆராய்ந்து எடுக்கப்பட்ட முடிவு : வெங்கையா நாயுடு விளக்கம்

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: ‘உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யக் கோரி காங்கிரஸ் தலைமையில் 7 எதிர்க்கட்சிகள், மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடுவிடம் கடந்த வெள்ளிக்கிழமை நோட்டீஸ் கொடுத்தன. இதை கடந்த திங்கட்கிழமை அவர் நிராகரித்தார். இது அவசர கதியில் எடுக்கப்பட்ட சட்டவிரோத நடவடிக்கை என காங்கிரஸ் குற்றம் சாட்டியது. இந்நிலையில் பதவி நீக்க தீர்மான நோட்டீஸ் நிராகரத்ததற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் உச்ச நீதிமன்ற வக்கீல்கள் 10 பேர், வெங்கையா நாயுடுவை நேற்று சந்தித்தனர். அவர்களிடம் வெங்கையா நாயுடு கூறியதாவது:உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது எதிர்க்கட்சிகள் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வர வாய்ப்புள்ளதாக மீடியாக்களில் செய்தி வெளியானதிலிருந்து கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக இந்த விஷயத்தில் அனைத்து விதிமுறைகள், நடைமுறைகள், முன்மாதிரிகள் ஆகியவற்றை நான் நன்கு ஆராய்ந்தேன். இது அவசரமாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல. சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு. நான் எனது பணியை திருப்தியாக செய்துள்ளேன். இதற்கு பாராட்டு தேவை இல்லை. மாநிலங்களவைத் தலைவர் என்ற முறையில் என்னிடம் எதிர்பார்க்கப்பட்ட பணியை நான் சிறப்பாக செய்துள்ளேன் என்றார். இந்த விவகாரம் தொடர்பாக நிதியமைச்சர் அருண்ஜெட்லி, ‘‘பதவி நீக்க தீர்மானம் கொண்டுவர வலுவான ஆதாரம் தேவை. வதந்திகள், காதால் கேட்கப்பட்டவை எல்லாம் ஆதாரங்களுக்கு மாற்றாக இருக்க முடியாது. அடிப்படை ஆதாரமில்லாமல் இந்த பதவி நீக்க தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது’’ என குறிப்பிட்டுள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அளித்த பேட்டியில், ‘‘உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக பதவி நீக்க தீர்மான நோட்டீஸ் கொடுத்தது தவறு.இந்தநோட்டீஸ் கொடுக்க வேண்டாம் என சோனியா மற்றும் ராகுல் காந்தியிடம் கூறினேன். பதவி நீக்க தீர்மானத்துக்கு நாங்கள் அதரவு தெரிவிக்கவில்லை. நீதித்துறையில் தலையிட எங்கள் கட்சி விரும்பவில்லை’’ என்றார்.

மூலக்கதை