சென்னை வங்கியில், துப்பாக்கி முனையில் ரூ.6 லட்சம் கொள்ளை கொள்ளையன் பிடிபட்டான்

PARIS TAMIL  PARIS TAMIL
சென்னை வங்கியில், துப்பாக்கி முனையில் ரூ.6 லட்சம் கொள்ளை கொள்ளையன் பிடிபட்டான்

சென்னையில் வங்கி கொள்ளை சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் அரங்கேறி வருகின்றன.

சென்னை அடையாறு இந்திராநகரில் பட்டப்பகலில் இந்தியன் வங்கி கிளையில் துப்பாக்கி முனையில் ரூ.6 லட்சத்து 36 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது.

கொள்ளை சம்பவம் நடந்த இந்தியன் வங்கி கிளை சென்னை அடையாறு இந்திராநகர் 1-வது அவென்யூவில் உள்ளது. இந்த பகுதி பெரும் பணக்காரர்கள் வாழும் முக்கிய பகுதி ஆகும். இந்த வங்கியின் மேலாளராக முகமது அஷ்ரப் என்பவர் பணியாற்றுகிறார். இவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்.

நேற்று மதியம் 12.45 மணி அளவில் வங்கி ஊழியர்கள் 5 பேர் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டு இருந்தனர். வங்கி மேலாளர் முகமது அஷ்ரப் தனது அறையில் அமர்ந்து பணிகளை கவனித்துக்கொண்டு இருந்தார். 5 வாடிக்கையாளர்கள் வங்கியில் நின்றுகொண்டு இருந்தனர்.

அப்போது தலையில் ஹெல்மெட் அணிந்து மர்ம நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் (மோட்டார் சைக்கிள் எண் : டி.என்.22 - பி.யு.9355) வந்தார். வங்கியின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திய அவர், நேராக வங்கிக்குள் புகுந்தார்.

வங்கி மேலாளர் அறைக்கு சென்ற அந்த நபர் ஹெல்மெட்டை கழற்றாமலேயே, மேலாளர் முகமது அஷ்ரப்பிடம் இந்தியிலும், ஆங்கிலத்திலும் பேசினார். ‘எனக்கு பெரிய அளவில் கடன் தொகை தேவைப்படுகிறது. கடன் வழங்குவதற்கான விதிமுறைகள் பற்றி நான் தெரிந்துகொள்ள வேண்டும்’ என்று அவர் கூறினார்.

அவர் ஹெல்மெட்டை கழற்றாமல் பேசியதால் மேலாளருக்கு சந்தேகம் ஏற்பட்டது. ‘முதலில் தலையில் இருக்கும் ஹெல்மெட்டை கழற்றுங்கள். இருக்கையில் உட்காருங்கள். அதன்பிறகு கடன்உதவி பெறுவது குறித்து பேசலாம்’ என்று மேலாளர் கூறினார்.

உடனே அந்த மர்ம நபர் ஆவேசமாக கூச்சலிட்டவாறு, தனது பேண்ட் பாக்கெட்டுகளில் இருந்து 2 கைத்துப்பாக்கிகளை எடுத்து மேலாளரின் நெஞ்சில் வைத்து மிரட்ட ஆரம்பித்தார். ‘அடுத்த ½ மணி நேரம் நீங்கள் எதுவும் பேசக்கூடாது. நான் சொல்வதை மட்டும் செய்யவேண்டும்’ என்றார். ஒரு துணிப்பையை கொடுத்து, ‘இந்த பை நிறைய பணத்தை நிரப்பி கொடுங்கள்’ என்று கட்டளையிட்டார்.

மேலாளரும் எந்த பதிலும் பேசாமல் மர்ம நபர் கொடுத்த பையை வாங்கிக்கொண்டு, கேஷியரின் அறைக்கு சென்றார். அவருக்கு பின்னாலேயே சென்ற அந்த மர்ம நபர் வங்கி ஊழியர்களையும், வாடிக்கையாளர்களையும் நோக்கி, ‘சத்தம் போட்டால் சுட்டுவிடுவேன்’ என்று ஆங்கிலத்தில் கத்தினார். இதனால் வாடிக்கையாளர்களும், வங்கி ஊழியர்களும் பயந்து நடுங்கினார்கள்.

மூலக்கதை