இளவரசர் வில்லியம்-கேத் தம்பதிக்கு ஆண் குழந்தை

தினகரன்  தினகரன்

லண்டன்: இங்கிலாந்து இளவரசி கேத் மிடில்டன் தன்னுடைய 3வது பிரசவத்தில் ஆண் குழந்தையை பெற்றார். சார்லஸ்-டயானா தம்பதிகளின் முதல் மகன் இளவரசர் வில்லியம். இவர் கடந்த 2011 ஏப்ரல் மாதத்தில் கேத் மிடில்டன் என்பவரை கரம்பிடித்தார். இவர்களுக்கு கடந்த 2013ல் ஜார்ஜ் என்ற மகனும், 2015ல் சார்லோட் என்ற மகளும் பிறந்தனர். இந்நிலையில், இந்த தம்பதிக்கு மூன்றாவதாக நேற்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிரசவத்திற்காக இளவரசி கேத் மிடில்டன் பாட்லிங்டன்னில் உள்ள பிரபல செயின்ட் மேரீஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளதாக கென்சிங்டன் அரண்மனை செய்தி வெளியிட்டுள்ளது.கேத் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதையடுத்து மருத்துவமனையை ஒட்டியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இவருக்கு முந்தைய பிரசவங்களை பார்த்த மகப்பேறு மருத்துவர் கெய் தார்பே பீஸ்டன் தலைமையிலான மருத்துவ குழுவினர் பிரசவம் பார்த்தனர். குழந்தை பிறக்கும் பொழுது 3.82 கிலோ எடையுடன் பிறந்ததாகவும் தாயும் சேயும் நலமுடன் உள்ளதாகவும் கென்சிங்டன் அரண்மனை வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.வில்லியம் - கேத் திருமணத்திற்கு பிறகு இங்கிலாந்து அரியணையில் பெண்களுக்கும் சம உரிமை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிறந்துள்ள இந்த குழந்தை இங்கிலாந்து அரியணையின் 6வது வாரிசாகும். இதேபோல கடந்த சனிக்கிழமை தன்னுடைய 92வது பிறந்தநாளை கொண்டாடிய இங்கிலாந்து ராணி எலிசபெத் IIவின் 3வது கொள்ளு பேரனாகும். குழந்தை பிறப்பதற்கு முன்பு இந்தக் குழந்தை பெண்ணாக இருக்கும் என்று இங்கிலாந்து மக்கள் விருப்பம் தெரிவித்தனர்.

மூலக்கதை