தி.மு.க., கூட்டணி கட்சிகள் இன்று மனிதச் சங்கிலி!!!

PARIS TAMIL  PARIS TAMIL
தி.மு.க., கூட்டணி கட்சிகள் இன்று மனிதச் சங்கிலி!!!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் இன்று மனிதச்சங்கிலி போராட்டம் நடத்துகின்றன. புதுக்கோட்டையில் நடைபெறும் போராட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

காவிரி பிரச்சினை தொடர்பான வழக்கில், மார்ச் மாதம் 29-ந் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. ஆனால், குறிப்பிட்ட காலத்திற்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காததால் தமிழக அளவில் எதிர்ப்புகள் வலுத்தன.

கர்நாடக சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்தே மத்திய பா.ஜ.க. அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மறுப்பதாக இங்குள்ள அரசியல் கட்சிகளும், விவசாய அமைப்புகளும் குற்றம்சாட்டத் தொடங்கின. தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க.வும் இம்மாதம் (ஏப்ரல்) 1-ந் தேதி முதல் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

கடந்த 5-ந் தேதி தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 7-ந் தேதி காவிரி மீட்பு பயணத்தை தொடங்கினார். திருச்சி முக்கொம்பில் தொடங்கிய இந்த பயணம் 12-ந் தேதி கடலூரில் நிறைவடைந்தது. அன்றைய தினம் சென்னை வந்த பிரதமர் நரேந்திரமோடிக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

13-ந் தேதி கூட்டணி கட்சி தலைவர்களுடன் மு.க.ஸ்டாலின் சென்று கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார். அப்போது, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க மத்திய அரசை வலியுறுத்தவும், பிரதமரை சந்தித்து முறையிட அனுமதி பெற்றுத்தரவும் கவர்னரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, கடந்த 16-ந் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இன்று (திங்கட்கிழமை) தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற இருக் கிறது. மாலை 4 மணி முதல் 5 மணி வரை ஒரு மணி நேரம் இந்த மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது.

புதுக்கோட்டையில் நடைபெறும் மனிதச்சங்கிலி போராட்டத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார். சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இதேபோல், சிவகங்கையில் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமியும், தஞ்சாவூரில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவும், திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசனும், பெரம்பலூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனும், கிருஷ்ணகிரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனும், திருச்சியில் மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லாவும் மனிதச் சங்கிலி போராட்டத்தில் கலந்துகொள்கின்றனர்.

தமிழகம் முழுவதும் நடைபெறும் இந்த மனிதச் சங்கிலி போராட்டத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொள்கின்றனர்.

மூலக்கதை